உலக நுகர்வோர் தினக் கவிதை
மார்ச் -15, உலக நுகர்வோர் தினக் கவிதை
ஆற்றில் போடினும் அளந்து போடென
ஆன்றோர் சொன்னார் அன்றே சேதி!
சாற்றும் கடமை சரியென இருப்பின்
சஞ்சலம் கொண்டு சாயாது நீதி!
மாற்று வணிகத்தை மாற்றிட வேண்டி
மாறிட வேண்டும் மானுட ஜாதி!
தூற்றிய மணியென தூய்மை நிறைந்து
தொலைந்து போமோ தொல்லைகள் மீதி!
கொடுத்திடும் பொருளே குளறுபடி யானால்
கொடுத்திட வேண்டும் கொடுஞ்சிறை வாசம்!
தடுத்திடும் எடைக்கு தண்டனை யென்றால்
தன்னலம் ஒழிந்து பொதுநலம் பேசும்!
மிடுக்கென வார்த்தையில் மயங்கா மனமே
மேன்மை கொண்டு மேவிட வீசும்!
உடுக்கை இழந்தவன் உண்மைக் குரலாய்
உரிமைக் காத்து ஊழலை ஏசும்!
நமக்கென வென்று நடப்போர் பலரால்
நாணய வணிகம் நலிந்தே போனது!
தமக்கென வந்து தவிக்கிற போது
தரத்தின் மேன்மை தலையாய் யானது!
உமக்குள் வந்திட உயரிய சிந்தனை
உலகே விழித்திட ஒற்றுமை பேணுது!
ஏமாறும் நுகர்வு இல்லாமல் மறைந்து
எல்லோர் வாழ்விலும் எழுச்சிக் காணுது!
-ப.கண்ணன்சேகர், 9894976159.