ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!
என் ஆசிரியப் பெருந்தகைகளுக்கு
சமர்ப்பனம்!!
கோபுரத்தில் எனை ஏற்றி விட்டு
என்றும் நிலை மாறா
ஏணி நீங்கள்!
பள்ளி தொடா மழலையாய்
மழலை வார்த்தைகள்
இதழால் நான் உதிர்க்க
கரம் பிடித்து அகரம்
எழுத வைத்து-என்
வார்த்தைக்கு
உயிர் கொடுத்தீர்கள்!
கல்லும் உடையாமல்
சிலையும் சிதறாமல்
எங்களை செதுக்கிய
சிற்பி நீங்கள் !!
நாங்கள் பரிட்சை எழுத
நீங்கள் அல்லவா படித்தீர்கள்
நாங்கள் வெற்றிப் பெற
நீங்கள் அல்லவா உழைத்தீர்கள்!
ஆசிரியர் பணியே அறப்பணி
அதற்கே உன்னை அர்ப்பணி!
இது தான் உங்கள்
தத்துவம்! சத்தியம்!!
தாய் ஊட்டாத பாலை
பசு ஊட்டும்
இல்லம் புகட்டாத
இயல்பை
ஆசிரியர் புகட்டுவர்..
நான் முத்து சேர்க்க
மூச்சடக்கி முத்து
குளித்தவர்கள் நீங்கள்!
எத்தனை கேலிகள்
எத்தனை கிண்டல்கள்
எத்தனை துன்பங்கள்,
எத்தனை தொல்லைகள்
எங்களால் உங்களுக்கு
இன்று நினைக்கையில்
உள்ளம் வலிக்கிறதே!!
எத்தனை அன்பு ,
அரவணைப்பு
எத்தனை அறிவுரைகள்
ஆலோசனைகள்
எல்லாம் எதற்கு
எங்கள் வாழ்வு
வளம் பெறத்தானே !!
ஆரம்பக் கல்வி ஆசிரியை
சீதா அக்கா முதல்
கல்லூரி முதல்வர்
கிருஷ்ணமூர்த்தி சார் வரை
உங்கள் அனைவரையும்
இன்றும் என்
இதயத்தில் சுமக்கிறேன்..
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்றை யவை.”