அப்பா என்றால்…

Vinkmag ad

அப்பா என்றால்…

============================ருத்ரா இ பரமசிவன்

“அம்மா என்றால் அன்பு”

அப்பா என்றால் என்பு!

ஆம்

என் முதுகெலும்பே அவர் தான்!

இந்த குருத்தெலும்பு

ஓடும்போது ஆடும்போது

எங்கே முறிந்து விழுந்து இடுமோ

என்று

அணைத்து அரண் அமைக்க‌

உள்ளத்தால் உருக்கி வார்க்கப்பட்ட‌

எலும்புக்கூட்டமே அவர்தான்.

கண்ணீர் என்றால்

பூப்போல் கசங்குவாள் அம்மா!

அதை கருங்கற்கோட்டை ஆக்க‌

கற்றுத்தருவார் அப்பா!

வாழ்கையின் கரடுமுரடுகளில்

கால் பதிக்க வைத்து

அதன் கல்லும் முள்ளும்

தரும் புண்களை

தன் நெஞ்சில் ஏற்றுக்கொள்வார்.

நான் கல்வியின் உயரம் எட்டச்செய்ய‌

எந்த இமயத்துச்சிகரம் என்றாலும்

விரல் பிடித்து ஏற்றி

விண்ணையும் கூட அதிரவைப்பார்.

கோபமும் கடும் சொல்லும்

கொப்பளிப்பது உண்டு.

அது அவரது உயிரின் சீற்றம்.

என் உயிரும் உயர்வும்

காக்கப்படவேண்டும்

என்ற அவர் ரத்தமே

அப்படி லாவாவாய் உருகிப்பாயும்!

தந்தை சொல் போல்

மன் திறம் இல்லை!

நம் மனத்தை

அடி அடி மேல் அடி அடித்து

வார்க்கும் கலையே

அந்த மந்திரம்.

அப்பபா!

விடுதலை வேண்டும் எனவும்

நீ நினைப்பது உண்டு!

அது

அவர் நுரையீரல் பூங்கொத்திலிருந்து

உன் உயிர்க்காற்றுத்துளிகளை

இழந்து விடுவதற்கு சமம்.

வாழ்க்கையின் கான்வாஸில்

என் தூரிகைகள்

தற்செயலாய்

தடுக்கிவிழுந்து தடுக்கி விழுந்து

இழையும் ஓவியத்துக்கு

அவரே “ஃபினிஷிங் டச்”.

அவர் முடிந்து போனாலும்

என்னை எப்போதும்

ஒரு வெற்றிக்கு

ஆரம்பம் செய்துவைத்துக்

கொண்டே இருப்பவர்.

பிறந்த நாளும் மறைந்த நாளும்

மட்டும்

நினைவில் ஏற்றிவிட்டு

மற்ற நாட்களின்

காகித காலண்டர் தாள்களின்

சவக்கிடங்கில்

அந்த சரித்திரத்தை

புதைத்துவிடும் முட்டாள்தனங்களின்

உலகம் இது.

வாழ்வின்

என்

பந்தய ஓட்டங்களில்

“அப் ..அப்..அப்..”

என்று

உருவமாயும் அருவமாயும்

குரல் கொடுத்துக்கொண்டே இருப்பது

அதோ நிற்கும் அவர்..

என் அப்பா!

News

Read Previous

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

Read Next

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *