அப்பாவின் கோரிக்கை …….

Vinkmag ad
என் தந்தை கரம்பற்றி
நான் நடந்ததாக
எனக்கு நினைவில்லை !

அதை வாங்கிக் கொடுங்கள்
இதை வாங்கிக் கொடுங்கள்
என என் தந்தையிடம்
நான் கேட்டதாக
நினைவுகள் இல்லை !

அப்பாவின் முதுகில்
அமர்ந்து யானை
சவாரி செய்ததாகவோ
அவர் ஓட்டும்
வண்டியில் அமர்ந்து
பள்ளிக்குச்சென்றதாகவோ
எந்த வித நினைவுகளும் இல்லை !

ஏழு வயதில்
அப்பாவின் பாடையோடு
இடுகாட்டிற்குப்போனது
மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது !

ஆறடி உயரமுள்ள
அப்பாவை
ஆறடி உயரமுள்ள
குழிக்குள் உள்ளே இறக்கி
கல்லைப் போடு
கல்லைப் போடு
மண்ணைப் போடு
மண்ணைப் போடு
என்று மற்றவர்கள் சொல்ல
கல்லைப் போட்டு
மண்ணைப் போட்டு குழியை
மூடியது மட்டுமே
நினைவுகளில் இருக்கிறது !

கங்காரு போலவே
பிள்ளைகளைச்
சுமந்து கொண்டே
அலைகின்றாய் என
நண்பர்கள் திட்டியபோதும்
அவரவராய் வளரட்டுமே
எனப் பலர் அறிவுறுத்தியபோதும்
உங்களோடு இருப்பதிலே
உள்ளபடியே மகிழ்ச்சிதான் !

நான் இழந்ததை
உங்களுக்கு தருவதற்காக
எனை வருத்திக்கொள்வதை
எனது பலவீனமாய்
எடுக்க மாட்டீர்கள்
எனும் நம்பிக்கை
எனக்கு உண்டு
என் குழந்தைகளே !

ஆண்டு தோறும்
திதி அன்று திவசம் என்று
தந்தையை இழந்தவர்கள்
உழைக்காதவர்கள்
உண்பதற்கு
இழவு வரி அளிக்கும்
ஏற்பாட்டில் எனக்கு
உடன்பாடில்லை !

என் தந்தை நினைவுநாளில்
முதியோர் இல்லத்தில்
நுழைகின்றேன்
அங்கிருப்போர்
என் தந்தை வயதிலிருப்போர்
இருகரம் கூப்பி
எழுந்து நின்று வணங்கும் போது
என் தந்தையும் உயிரோடு
இருந்திருந்தால்
இவர் வயதில் இருப்பாரோ
எனும் எண்ணம் ஓட
அவர்களுக்கு வணக்கம்
சொல்லிபடியே நுழைகின்றேன் !
என்னால் முடிந்ததை
அவர்களுக்கு செய்கின்றேன் !

என் குழந்தைகளே !
தாத்தாவின் நினைவு நாளில்
அப்பாவின் கோரிக்கை ….
எதிர்காலத்தில்
என வழியைப் பின்பற்றுங்கள் !
அர்த்தமற்ற சடங்குகளை
ஆழக்குழி தோண்டிப்
புதையுங்கள் !
பெற்றோரின் நினைவு நாளில்
எளியோருக்கு உதவுங்கள் !

News

Read Previous

முதுமை

Read Next

வாழ்ந்து காட்ட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published.