குழந்தைத் திருமணம் களையப்படுமா தேசத்தின் அவமானம்?
குழந்தைத் திருமணம்
களையப்படுமா தேசத்தின் அவமானம்?
நீரிழிவு நோயால் தாயைப் பறிகொடுத்த நிலையில், தந்தையின் பிடிவாதத்தால் 37 வயதான பழ வியாபாரியைத் திருமணம் செய்துகொண்டு, மூன்றே நாளில் இறந்த 14 வயது போடிமெட்டுச் சிறுமியை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
தன் தம்பியின் முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால், அவரைத் தேற்றுவதற்காகத் தன் 14 வயது மகளைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொடுத்த திருச்சியைச் சேர்ந்த தாயைப் பற்றித் தெரியுமா?
14 வயதுச் சிறுமியை மணந்துகொண்டு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், மூன்றாம் முறையாகக் கர்ப்பமானவர் மீது சந்தேகப்பட்டு, கொடூரமாகத் தாக்கி, உடம்பில் சிகரெட்டால் சுட்டும், தாலிக்கயிற்றால் கழுத்தை இறுக்கியும் கொன்ற தேனி சுரேஷ் மீது கோபம் வருகிறதா?
இந்த டிஜிட்டல் யுகத்திலும் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றனவா என்கிற கேள்விக்கான விடைகளே இந்தச் சம்பவங்கள்.
“குழந்தைகளுக்கான உரிமைகளும் நீங்களும்” அமைப்பு இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் குறித்துக் கடந்த 10 ஆண்டுகளின் நிலை எனும் தலைப்பிலான ஆய்வறிக்கையைக் கடந்த அக்டோபரில் வெளியிட்டது. இந்திய மக்கள் தொகையில் 10 வயது முதல் 19 வயது வரையிலான 1.72 கோடிக் குழந்தைகள், பதின்வயதினர் திருமணம் முடித்துள்ளனர். இது ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 7 சதவீதம் என்று க்ரை தெரிவித்துள்ளது. இவை மட்டுமல்ல யுனிசெஃப், ‘சைல்ட் லைன் இந்தியா‘, ‘சேவ் தி சில்ரன்‘ போன்ற அமைப்புகளும் அதிகரித்துவரும் குழந்தைத் திருமணங்கள் குறித்து எச்சரித்துள்ளன.
கடந்த ஆண்டுவரை தமிழகத்தில் 10,913 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் மட்டும் 2,242 குழந்தைத் திரு மணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்று தமிழக சமூகநலத் துறை தெரிவித்துள்ளது. கரோனா ஊரடங்கை ஒட்டிய 11 மாதங்களில் மட்டும் குழந்தைத் திருமணம் தொடர்பாக சைல்டு ஹெல்ப் லைன் அமைப்புக்கு 1,700 அழைப்புகள் வந்துள்ளன.
கிராமப்புறங்களில் மட்டுமல்ல, நகர்ப்புறங்களிலும் குழந்தைத் திரு மணங்கள் நடக்கும் அவலம் தொடர்வதாகக் கூறுகிறார் குழந்தைகள் நலச் செயற்பாட்டாளரும் தோழமை அமைப்பின் இயக்குநருமான தேவநேயன். தமிழகத்தில் மட்டும் மொத்தம் 62,500 திருமணங்கள் 2018இல் நடந்துள்ளன. தமிழக அளவில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. இது நமக்கு அவமானம்.
அரசு, சமூகம், குடும்பம் மூன்றும் இணைந்து செயல்பட்டால்தான் இதைத் தடுக்க முடியும் என்று கவலை பகிர்கிறார் தேவநேயன்.
(2021 ஜனவரி 3 தமிழ் இந்து பெண் இந்து இணைப்பில் க.நாகப்பன் எழுதிய கட்டுரையிலிருந்து)