என்ன செய்யப் போகிறது இந்தியா?
என்ன செய்யப் போகிறது இந்தியா?
புதிய ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். உலக அளவில் சமூகம், அரசியல், பொருளாதார ரீதியாக மிக முக்கியமான மாற்றங்களுக்குக் கடந்த ஆண்டு தூண்டுகோலாக அமைந்திருக்கிறது. கரோனா பரவலைத் தடுத்தல், காலநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்குத் தீர்வு காணுதல், செயற்கைத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, தற்போதைய யுகத்துக்கு ஏற்றாற்போல் பொருளாதார கட்டமைப்பை உருவாக்குதல் என்ற நெருக்கடிகளை உலகம் தற்போது எதிர்கொண்டிருக்கிறது.
இவை பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு சார்ந்த சவால்கள். இவற்றின் மைய தளத்தில் இந்தியா எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று அதன் சரிசமமற்ற வளர்ச்சி. இந்தியாவைப் பொருத்தவரை அனைத்து தொழிற் செயல்பாடுகளும் ஒவ்வொரு மாநிலங்களின் தலைநகரையும், அதன் ஒரு சில முக்கிய நகரங்களையும் மட்டுமே மையப்படுத்தி நிகழ்கின்றன. இதனால் அதிகாரம் ஒரு இடத்தில் குவிக்கப்படுகிறது. அந்த நகரங்கள் மட்டும் வளர்ச்சியை எட்டுகின்றன. பிற சிறு நகரங்கள் தேங்கி விடுகின்றன.
இந்நிலையில் தற்போது அந்தந்த சிறு நகரங்கள், கிராமங்களை முக்கியத்துவம் கொண்டதாக மாற்ற வேண்டும். இதுவே இந்தியா போன்ற நாடுகளில் பொருளாதார ரீதியான ஏற்றத் தாழ்வுகளை குறைந்தபட்சமாகவேனும் ஈடுசெய்யும்.
சமூக மறுகட்டமைப்புக்கான தருணம்
அனைத்துக்கும் மேலாக, இந்தியா வளர்ச்சி குறித்த அதன் பார்வையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கிறது. இந்திய மக்களில் 30 சதவீதத்தினர் எவ்வித அடிப்படை மருத்துவ வசதிகளையும் பெற முடியாத நிலையில் இருக்கின்றனர். ராணுவத்துக்கு ரூ.3.37 லட்சம் கோடி செலவிடும் இந்தியா, அதில் கால் பங்கைக்கூட மருத்துவத்துக்கு செலவிடுவதில்லை. நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.69,000 கோடி அளவிலேயே சுகாதாரத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது மொத்த ஜிடிபியில் 0.3 சதவீதம் மட்டுமே. 10,000 நபர்களுக்கு 6 மருத்துவர்கள் என்ற ரீதியிலேயே இந்தியாவில் மருத்துவர்கள் விகிதாச்சாரம் உள்ளது. ஒரு லட்சம் பேருக்கு ஒரு அரசு மருத்துவமனை என்ற வீதத்திலும் 2,046 பேருக்கு ஒரு படுக்கை என்ற வீதத்திலுமே இங்கு மருத்துவ வசதி உள்ளது. விளைவாக, மருத்துவ செலவினங்களில் 65சதவீதம் அளவில் மக்கள் தங்கள் சொந்தப் பணத்தையே செலவிடுகின்றனர்.
ஆனால், இந்தியாவின் ஆதாரப் பிரச்சினை வேலைவாய்ப்பு சார்ந்தோ, நகரக் கட்டமைப்பு சார்ந்தோ, மக்கள் நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு சார்ந்தோ மட்டும் இல்லை. இந்தியா என்ற நாடு சமத்துவமின்மையால் கட்டமைக்கபட்டிருக்கிறது. சாதி, மதம், இனம், மொழி, பாலினப் பாகுபாடு என்ற சமூக ரீதியான ஏற்றத் தாழ்வுகள் சரி செய்யப்படாமல் எந்த வளர்ச்சியும் இங்கு சாத்தியமில்லை. அந்த வகையில் இந்தியா பொருளாதாரக் கட்டமைப்பை மட்டுமல்ல, சமூகக் கட்டமைப்பையும் மாற்ற வேண்டிய தருணத்தில் இருக்கிறது.
(தமிழ் இந்து வணிக வீதி இணைப்பில் முகம்மது ரியாஸ் எழுதிய கட்டுரையிலிருந்து)