மௌத்தை மறந்து வாழும் மனிதர்களால் மட்டுமே இப்படி வாழ முடியும்!
மௌத்தை மறந்து வாழும் மனிதர்களால் மட்டுமே இப்படி வாழ முடியும்!
எனது நண்பரின் வீட்டு திருமணத்திற்கு சென்றேன்.அவரது நெருங்கிய குடும்ப உறவினர் ஒருவர் தமது குடும்பத்தோடு வெளியூரில் இருந்து வந்து கலந்து கொண்டார்.இவர் பெரும் செல்வந்தராம்.
நல்லபடியா திருமணம் நடந்து முடிந்து உள்ளூர் மக்கள் கலைந்து சென்றதும்,வெளியூர் மக்களுக்கான இரவு விருந்து நடைபெற்றது.எல்லோரும் சாப்பிட்டு முடித்து அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நண்பரின் உறவினர் வீடுகளில் உறங்க சென்று விட்டனர்.
இந்த செல்வந்தர் மட்டும் நாங்க கிளம்புறோம் என்று சொல்லி தமது குடும்பத்தாரை அழைத்து கொண்டிருந்ததை கவனித்து விட்டு எனது நண்பர் ஓடி வந்து இன்னேரம் எங்கே மச்சான் போறீங்க?
இரவு தங்கி விட்டு நாளைக்கு மாப்பிள்ளை வீட்டு வலிமா விருந்தை முடித்து போகலாமே என்ற எனது நண்பரின் பேச்சை இடைமறித்த அந்த செல்வந்தர் இன்று இரவு நாங்க எங்கே தூங்குறது என்று கேட்டார்?
எனது சகோதரரின் வீடு காலியாகத்தான் இருக்கு மச்சான் உங்களுக்கு அங்கே தான் தங்க ஏற்பாடு செய்திருக்கேன் என்று சொல்லிக்கொண்டே அந்த வீட்டுக்கு செல்வந்தரையும் அவரது குடும்பத்தாரையும் அழைத்து சென்றார் எனது நண்பர்.
குறிப்பிட்ட அந்த வீட்டை போய் பார்த்த செல்வந்தர்,வீடு புதுசா இருந்து என்ன பயன்?ஏ.சி இல்லையே?ஏ,சி இல்லாவிட்டால் எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் தூக்கமே வராது.
அதனால் நாங்க இப்பவே கிளம்பி ஊருக்கு போய் விடுகிறோம்.காரில் ஏ.சி இருப்பதால் ஒன்னும் தெரியாது என்று சொல்லிய கன நேரத்தில் கிளம்பி விட்டார்.
வந்த உறவினர் இப்படி திடீரென கிளம்பி செல்வதை கண்டு கவலையில் ஆழ்ந்த எனது நண்பரின் கண்களில் கண்ணீர் கோர்வையாய் கோர்த்து கொண்டிருந்ததை கவனித்த நான் அருகில் சென்று இதையெல்லாம் நினைத்து கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் சொல்லியும் கூட அவரது மனதில் ஏற்பட்ட ஒருவித கவலை நீங்கியபாடில்லை.
“ஒருநாள் இரவை கூட ஏ.சி இல்லாமல் கழிக்க முடியாது என்ற கொள்கை கொண்ட இந்த செல்வந்தர்,நாளை மரணத்திற்கு பின்பு மறுமை வரை நிரந்தரமாய் மண்ணறைக்குள் எப்படி வாழ போகிறாரோ?“என்ற கேள்வியுடன் நானும் விடை பெற்றேன்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.