நூலெடுப்போம்
நூலெடுப்போம்
சைகையில் தொடங்கி ஓவியமாய் ஒலிக்குறிப்பாய் வளர்ந்து எழுத்தாணித்தாயின் தழுவலில் ஓலையில் முகிழ்த்தன முந்தையர் எண்ணங்கள்
வளர வளர எந்திரங்கள் பெற்றெடுத்த காகிதக்குழந்தைகள் புத்தகங்கள்
கருப்பு வெள்ளையில் கருத்துச்சொன்ன நிதர்சன வரலாறுகள்
பரண்ஓலையெல்லாம் தூசுதட்டப்பட்டு அச்சுவெல்லமாய் நமக்கு கிடைத்த சமூகத்தின் சாளரங்கள்
எழுத்துகள் அணிவகுத்து கண்குளிர நாம் தரிசித்த இலக்கிய ஆலாபனைகள்
ஒளித்த வித்தையெல்லாம் வெளிச்சமானது
வித்தையெல்லாம் விருட்சமாக்கியது
கைநாட்டுக்காரர்களின் கரமேறி அவர்தம் நெஞ்சதனில் உரமாகி மைதொட்டு கையெழுத்தை பிரசவித்தது
கற்காலம் மலையேறி கற்கும் காலமானது இக்காலம்
ஏடுகளை புரட்ட புரட்ட களையழிந்து கலை முகிழ்த்தது
வாசிப்பு நேசிப்பானது
விடிய விடிய படித்த கதைகள் கவிதைகளென நிழலாடுகிறது ஏராளமாய் நெஞ்சில்
மனிதா
மானம் காக்க மட்டுமல்ல
மனம் காக்கவும்
நூல் முக்கியம்
உன்
சோம்பல் சிறகுகளை முறித்தெறிந்துவிட்டு
இனியேனும் புத்தகம் தொடு
வெடிக்கட்டும் உன்னிலிருந்து ஒரு புதுயுகப் புரட்சி
இன்று உலக புத்தக தினம்
— சீனி.தனஞ்செழியன்
Tags: நூலெடுப்போம்