திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?

Vinkmag ad

நன்றி: சிறகு மின்னிதழ் – http://siragu.com/திருவள்ளுவர்-யார்-அவரது/

 

திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?

தேமொழி

 
Feb 1, 2020
 
தொடர்ச்சி….
 

வள்ளுவர் குறித்த பற்பல கட்டுக்கதைகளை ஆசிரியர் கௌதம சன்னா தம் நூலில் அறிமுகப்படுத்திய பின்னர், அதற்கு அடுத்து வரும் பகுதி சைவ சமய, வைதீக சமய தாக்கத்தில் உருவிழந்து போன வள்ளுவர் யார் என்ற கேள்வியை அயோத்திதாச பண்டிதர் தனது ஆய்வுக் கோணத்தில் அணுகியதை விளக்கும் பகுதியாக அத்தியாயம் 5 முதல் 13 வரை அமைகிறது.

திருவள்ளுவ நாயனார் மற்றும் திருவள்ளுவ சாம்பனார் என அறியப்படும் புலவர்கள் இரு வேறு புலவர்கள் என்பார் பண்டிதர் அயோத்திதாசர். திருவள்ளுவ நாயனார் குறள் தந்தவர். ஞானவெட்டியான் நூலை எழுதிய திருவள்ளுவ சாம்பனார் என்பவர் நாயனாருக்கும் பிற்காலத்தவர். மாமதுரைக் கச்சன் (அல்லது வடமதுரைக் கச்சன்) என்று அறியப்படும் ‘கூர்வேல் வழுதி’ என்ற அரசனுக்கும் ‘உபகேசி என்ற அரசிக்கும் பிறந்து நாயனார் என்ற பெயர் சூட்டப்பட்ட இளவரசன்தான் குறள் யாத்த வள்ளுவராக நாம் அறியப்படும் திருவள்ளுவ நாயனார் எனக் கூறும் அயோத்திதாசர் ‘நல்கூர் வெளியார்’ என்பர் எழுதிய ‘திரிகுறள் சாற்றுக்கவி’ பாடலில் செந்நாப் போதரின் பெற்றோர் யாவர் எனக் குறிக்கும் வரிகளை இதற்குச் சான்றாகக் காட்டுகிறார்.

உலக இன்பங்களில் பற்றற்று வளரும் வள்ளுவ நாயனார் பெற்றோர் அனுமதியுடன் துறவறம் பூண்டு பௌத்த சங்கத்தில் சேர்கிறார், அக்காலத்தில்தான் குறள் எழுதினர் என்று கூறும் அயோத்திதாசர் அதற்கு ‘கீரந்தையாரின்’ சாற்றுக்கவி பாடலை சான்றாக முன்வைக்கிறார். “சிலாசாசன தியான பஞ்சரத்தினப்பா” என்ற வள்ளுவரின் வரலாறு கூறும் பாடல் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் (கல்வெட்டில் பதிப்பிக்கப்பட்டு இன்று காணாமல் மறைந்து போன) கல்வெட்டில் உள்ள பாடல் மற்றொரு சான்றாகப் பண்டிதரால் காட்டப்படுகிறது.

a2.jpg

இந்த ‘திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில்’ என்பது முன்னர் வீரராகுல விகாரையாக இருந்து, பின்னர் வைணவக் கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது, அதற்கு அங்குள்ள பெளத்த பரிநிர்வாண சிலை சான்று எனப் பண்டிதரின் கள ஆய்வின் முடிவுகள் குறிப்பிடுகிறது (பக்கம்- 90). திருவள்ளூர் தான் வள்ளுவர் திருக்குறளை நிலைபெறச் செய்த இடமாகக் காட்டப்படுகிறது. வள்ளுவர் பிறந்த காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்றும் (பக்கம்- 90), வள்ளுவர் பிறந்து வாழ்ந்த இடங்களாகப் பாடல்களில் காட்டப்படும் ஊர்கள் இன்றும் திருவள்ளூர் பகுதியில் இருப்பதும், அப்பகுதியில் மேலும் பல பௌத்த பின்னணி பெயர் கொண்ட ஊர்களும் அமைந்திருப்பது தற்செயலானதல்ல, ஒரு காலத்தில் இங்கு பௌத்தம் செழித்திருந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது என்கிறார் நூலாசிரியர்.

வள்ளுவர் யார்? அவர் பின்னணி? என்ன என்ற வரலாற்று ஆய்வில் ஆதி மற்றும் பகவனின் கைவிடப்பட்ட குழந்தை அவர், ஆதி-பகவனின் ஏழு பிள்ளைகளான சேரமான்/சிலைமான்/அதியமான், கபிலர், வள்ளுவர், உப்பை, உருவை, ஔவை, வள்ளியம்மை என்ற எழுவரில் ஒருவர் என்ற கோணம் மட்டுமோ, அல்லது அயோத்திதாசர் காட்டும் இளவரசர் என்ற கோணமோ மட்டும் இல்லை.

சமயக் கருத்துகளின் அடிப்படையில் அவர் சமணர் என்று வாதிடுவோரும் உண்டு. அவர்கள் குறளின் கருத்துக்கள் சுட்டும் சமண கொள்கைகளின் அடிப்படையிலோ, அல்லது சமணர்கள் தங்கள் வழிபாட்டில் பலநூறு ஆண்டுகளாக வள்ளுவரைப் போற்றும் வழக்காற்றியல் அடிப்படையிலோ அக்கோணத்தை முன்வைப்பர் (பார்க்க, “தமிழகத்தில் ஜைனம்”, ஜீவபந்து டி. எஸ். ஸ்ரீபால்). வள்ளுவரின் மற்றொரு வரலாற்றுக் கோணமாக, குறளின் கருத்துகளை அகச் சான்றுகளாகக் கொண்டும், அவரது வள்ளுவர் என்ற பெயரின் அடிப்படையில் ஆராய முற்படும் அண்மைய ஆய்வுச் செய்திகளும் உண்டு. அக்கோணத்தில் வள்ளுவரை வழிபடும் கேரள வரலாற்றுத் தகவலோஅல்லது வள்ளுவர் என்ற பெயரின் அடிப்படையில் வள்ளுவ நாடு அவர் பிறப்பிடமாக இருக்கக்கூடும் என்ற ஆய்வுக் கோணங்களோ கூட உண்டு (பார்க்க, “திருவள்ளுவர் பிறந்தது குமரி மண்ணில்”, டாக்டர் எஸ். பத்மநாபன் ஆய்வுகள்).

இத்தகைய மாறுபட்ட வரலாற்றுக் கோணங்களும் வள்ளுவர் யார் என அவர் பின்னணியை ஆராயும் இந்த நூலில் ஓரிரு பத்திகளில் கூட காட்டப்படவில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதனால், வள்ளுவரின் வரலாறு குறித்து ஆய்வு செய்ய விரும்பும் இந்த நூலின் நோக்கத்தை, முழுமையை நோக்கிச் செல்லாத நிலையில் உள்ள ஒரு குறைபாடாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, அயோத்திதாசர் பண்டிதரின் பார்வையில், அவர் ஆய்வின் அடிப்படையில் வள்ளுவர் யார் என்பதற்கு அவர் வைத்த சான்றுகளுக்கு இந்நூலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என முடிவெடுக்கலாம். சமண, சைவ வள்ளுவர் உரிமை கோரல்களுக்கிடையே வள்ளுவரின் பௌத்த உரிமை கோரலுக்குரிய தரவுகளையும் விவரிப்பதுதான் நூலின் கோணம் எனக் கொள்ளலாம்.

திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?

– பண்டிதர் பார்வைகளின் மீது ஒரு மீளாய்வு:

திருவள்ளுவர் யாரென்று கூறும் அயோத்திதாசர் ஆய்வுகளும் அவரது முடிவுகளுமே மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என்பதை நாம் மறக்கலாகாது. நூலாசிரியர் கௌதம சன்னாவும் நூலின் இறுதி அத்தியாத்தை அதற்கெனவே ஒதுக்கியுள்ளார் (பக்கம்- 97).

வள்ளுவரின் பௌத்தப் பின்னணி என்ற வரலாறு குறித்துப் பரவலாக அறியப்படாத செய்திகளைப் பண்டிதர் அயோத்திதாசர் தேடி எடுத்து வழங்கியுள்ளார். அவரால் வள்ளுவர் குறித்து ஆய்வுலகத்திற்கு மற்றொரு கோணம் காட்டப்பட்டுள்ளது. வள்ளுவர் வாழ்வின் பின்னணி குறித்து அயோத்திதாசர் கூறும் செய்திகளில் இயற்கைக்குச் சவால் விடும் கற்பனைப் புனைவுகள் எதுவும் இல்லை என்பதுடன், தனி மனிதர் ஒருவர் அரச குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, துறவியாக மறைந்த இயல்பான வாழ்க்கைமுறையும், அம்மனிதர் அறிவுரைகளாகக் கொடுத்த சமூகப் பங்களிப்பும், அவரை அவற்றுக்காக நினைவுகூர விரும்பிய மக்களும், இன்றும் அவர் பெயரை ஒட்டி அமைந்துள்ள ஊரும் போன்ற செய்திகளைப் பண்டிதர் காட்டும் வள்ளுவரின் வரலாற்றுக் கோணத்தின் மூலம் நாம் அறிகிறோம்.

சைவர் தாங்கள் வழக்காற்றிலிருந்த கருத்துகளின் அடிப்படையில் புனைவுப் புராணங்கள் தோற்றுவித்தனர் என்ற அதே அளவையை பௌத்த உரிமை கோரல் பதிவுகளுக்கும் நாம் நீட்டிக்கலாம். பிறர் மேற்கொண்ட அதே முறையில் அவர்களும் தாங்கள் வழக்காறு மூலம் அறிந்தவற்றின் அடிப்படையில் வள்ளுவர் ஒரு பௌத்த இளவரசர் என்று பஞ்சரத்தினப் பாடல் எழுதியிருக்கலாம், கோயிலில் (இன்று மறைந்துவிட்டதாகக் கூறப்படும்) கல்வெட்டாக வெட்டி வைத்திருக்கலாம் (பக்கம்- 89). தொல்பொருள் ஆய்வாளர் புராணக்கதைகள் கூறும் கல்வெட்டுத் தகவலை அத்தகைய நம்பிக்கை அக்கால மக்களிடம் இருந்தது என்ற அளவில் மட்டும்தான் ஏற்றுக் கொள்வது வழக்கம்.

மேற்கொண்டு, அயோத்திதாசர் தந்த விளக்கமான தன்ம, சூத்திர, விநய பிடகங்கள் (மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பம்) என்ற முந்நூலை வழிநூலாகக் கொண்டு திராவிட மொழியில் அறம், பொருள், காமம் என்ற முப்பால் விளக்கம் தரும் நூல்தான் “திரிகுறள்” என்பதும் (பக்கம்- 89, 91) ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். “திரிபிடகத்தை புத்த தன்மமென்றும், திரிக்குறளை திருவள்ளுவர் தன்மமென்றும் கூறத்தகும்” என்பதும் கூட பண்டிதர் கருத்துதான் (பக்கம்- 91). அதாவது, திரிபிடகத்தை முன்மாதிரியாகக் கொண்டாலும் திருவள்ளுவர் கூறும் மெய்ப்பாடு தனித்துவம் பெற்றது என்ற விளக்கம் தருகிறார் அயோத்திதாசர்.

மேற்கூறப்பட்ட பௌத்த நூல் கருத்துகளையும் திருக்குறள் கருத்துகளையும் ஒப்பிட்டு எந்த அளவு ஒப்புமை இருக்கிறது என ஆராய்ந்து அறிய வேண்டியது நம் முன் எதிர் நிற்கும் மற்றொரு பெரும் ஆய்வு. முனைவர் நாகசாமி வடமொழியிலிருக்கும் ஒருசில நூல்களை அடியொற்றி திருக்குறள் எழுதப்பட்டது என்று கூறுவதை எந்த அளவில் ஒப்பிட்டு, இரு கோட்பாடுகளுக்கு இடையில் இருக்கும் அடிப்படை கொள்கை மாறுபாடு கொண்ட பொருந்தா கருத்துகளைச் சுட்டிக் காட்டி அவர் கருத்தை நாம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோமோ அதை இங்கு நினைவு கூரல் தகும். அதே போன்ற ஓர் இலக்கிய ஒப்பீட்டு ஆய்வுமுறை குறள் மற்றும் திரிபிடக பௌத்த நூல்களின் கருத்துகள் மீதும் வைக்கப்பட வேண்டும். அந்த வகையில், கௌதம சன்னா வள்ளுவர் குறித்த புதிய ஆய்வுகளுக்கான பாதையை இந்நூலின் வழியாக ஆய்வாளர்களுக்கு அகலத் திறந்து வைத்துள்ளார்.

அறிவியல் அடிப்படையில், சான்றுகள் மூலம் வரலாற்றைக் கட்டமைக்காத இந்திய வழக்கமும், புராணக்கதை புனைவுகளை உண்மை என்று நம்பி அவற்றை வரலாறாகக் கூறும் முறையும் இந்திய வாரலாற்றுப் புலத்தில் நிலவும் மிகப் பெருங்குறைபாடு. மேலை நாட்டுக் கல்வியின் தாக்கத்தில் சென்ற இரு நூற்றாண்டுகளாக இந்தியாவின் அணுகுமுறை வரலாற்றைக் கட்டமைப்பதில் மாற்றம் கண்டுள்ளது என்பதுதான் உண்மை. இன்று மரபணு ஆய்வுகள், தொல்லியல் தடயங்கள் மூலம் வரலாற்றை நாம் மீட்டுருவாக்கம் செய்து வரும் ஒரு நிலைக்கு நாம் மாறிவிட்டாலும் கூட, புனைவு எது? உண்மை எது? எது அறிவியலுக்குப் புறம்பானது? எவை இயற்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டவை? என்பதை நம்மைச் சுற்றியிருக்கும் பலர் இந்த நூற்றாண்டிலும் சீர்தூக்கிப் பார்க்க மறுக்கும் நிலைக்குப் புராணக்கதைகளை எதிர்க் கேள்விகள் கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையில் மக்கள் ஊறிப் போயிருப்பதே காரணம்.

அந்த வகையில்…. காலந்தோறும் திருவள்ளுவர் வரலாறு என்ற பேரில் வள்ளுவர் மீது தொடர்ந்து தூவப்பட்டு புழுதியாகப் படிந்துவிட்ட புனைகதைகள் என்ற தூசியைத் தட்டி வள்ளுவர் வரலாற்றை மெருகுபடுத்த முற்பட்ட கௌதம சன்னா அவர்களின் முயற்சிக்குப் பாராட்டுகள். வள்ளுவர் குறித்த மற்றொரு கோணத்தை இந்த நூல் மூலம் அறிமுகப்படுத்தியதற்கும் பாராட்டுகள். அவரது எளிமையான எழுத்து நடை சிறப்பு. நூலைப் படிப்போர் எவரும் வரலாறு என அறிமுகப்படுத்தும் புனைவுகளை ஆய்வுக் கோணத்தில் கேள்வி எழுப்பி சீர் தூக்கி ஆராயும் மனப்பான்மை பெற்றிடுவர் எனவும் நம்பலாம்.

“மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற கருத்தைப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வலியுறுத்திய வள்ளுவம் என்றும் உண்மையை நோக்கி நடைபோட முயலும் ஆய்வாளர்களுக்கு உறுதுணையாகவே இருக்கும்.

நூல் விவரம்:

திருவள்ளுவர் யார் ?

கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்

ஆசிரியர்: கௌதம சன்னா

முதற்பதிப்பு – டிசம்பர் 2019

வெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பு

விலை: ரூ.180/-

***நிறைவுற்றது***

News

Read Previous

வேண்டாத கனவுகள்

Read Next

உலகப் பேரவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *