கனமழை வருவதற்கு முன் அதிகமாக வியர்ப்பதேன்?
கனமழை வருவதற்கு முன் அதிகமாக வியர்ப்பதேன்?
வியர்வை உடலிலிருந்து வெளியேறுவது ஒரு தொடர்நிகழ்ச்சி. தோலில் வியர்வை வெளிப்பட்டதுமே அது ஆவியாகி காற்று மண்டலத்தில் கலந்துவிடுகிறது. ஆவியாவதற்கு வேண்டிய வெப்பத்தை உடலிலிருந்தே அது எடுத்துக் கொள்வதால் உடல் குளிர்ச்சி அடைகிறது. இந்த ஆவியாதலின் வேகம் காற்றிலுள்ள ஈரப்பதத்தைப் பொறுத்தது. காற்று மண்டலத்தில் ஈரப்பதம் குறைவாக இருப்பின் வியர்வை உடனே ஆவியாகி விடும். டில்லி சென்றவர்கள் இதைக் கவனித்திருக்கலாம். அங்கு காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் கொளுத்தும் வெய்யிலிலும் உடலில் வியர்வை அவ்வளவாகச் சேராது. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பின் (உதாரணமாக சென்னையில்) வியர்வை ஆவியாவது மெல்லவே நடக்கும். மழை பொழிவதற்கு முன் காற்று மண்டலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். ஆவியாகும் வாய்ப்பு குறைவு என்பதால், வியர்வை உடலிலேயே தங்கி நம்மைக் கொடுமைப்படுத்தும்.
அதிகமாக வியர்க்கும்போது மின்விசிறியை சுழல விடுகிறோம். அறையிலுள்ள காற்றில் விசிறி அசைவை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. உடலுக்கு அருகாமையில் உள்ள காற்று இடம் பெயர்வதால் புதிய காற்று அங்கு இடம் பெறுகிறது. அது கொஞ்சம் வியர்வையை உள்வாங்கிக் கொள்கிறது. அதனால் நமக்கு வியர்வையிலிருந்து சற்று விடுதலை கிடைக்கிறது. பேருந்து நின்று கொண்டிருக்கும்போது புழுக்கமாக இருக்கிறது. பேருந்து புறப்பட்டதும் காற்று வீசுவதைப்போல உணர்கிறோம். உண்மையில் காற்று அப்படியேதான் இருக்கிறது. பேருந்துதான் காற்றைக் கிழித்துக் கொண்டு முன்னேறுகிறது. பேருந்து நிலையாக இருக்கும்போது, பேருந்தின் வேகத்தில் காற்று வீசுவதும், காற்று நிலையாக இருக்கும்போது பேருந்து செல்வதும் ஒன்றுதான். இது ஒப்பீட்டு வேகம் (relative velocity) என அழைக்கப்படுகிறது.