இந்திரா காந்தியின் எமர்ஜென்சி… பி.ஜே.பியின் ’அர்பன் நக்சல்’ வியூகம்… என்ன வித்தியாசம்?
இந்தியா
இந்திரா காந்தியின் எமர்ஜென்சி… பி.ஜே.பியின் ’அர்பன் நக்சல்’ வியூகம்… என்ன வித்தியாசம்?
– ஜோ. ஸ்டாலின்
`நாட்டில் மீண்டும் எமர்ஜென்சி வராது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது” என்று சில ஆண்டுகளுக்கு முன்பு, பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் அத்வானி எச்சரிக்கை விடுத்தார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அவர் அப்படி ஓர் எச்சரிக்கை செய்தியைக் கொடுக்கவில்லை; மாறாக, தான் சார்ந்த பி.ஜே.பி-யின் ஆட்சி மத்தியில் நடந்துகொண்டிருந்தபோது, இந்த எச்சரிக்கை செய்தியை நாட்டுக்கு அவர் அறிவித்தார். அவர் சொன்னதுபோலவே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்தன. சமீபத்தில், “பிரதமர் மோடியைக் கொல்ல சதித்திட்டம் நடக்கிறது; மாவோயிஸ்டுகள் அந்தச் சதியில் ஈடுபட்டுள்ளனர்; அவர்களுக்கு ஆதரவாகச் சிலர் அறிவுத்தளத்தில் செயல்படுகின்றனர்” என்றுகூறி, தெலங்கான மாநிலத்தில் கவிஞர் வரவர ராவ், பத்திரிகையாளர் குர்மநாத் கிராந்தி, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் மற்றும் செய்தியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராகப் பெரிய ஆதாரங்கள் எதுவும் இல்லாதநிலையில், உரிய விசாரணை இல்லாமல் இந்தக் கைது நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளது. அதையடுத்து, இவர்களுக்கு, `அர்பன் நக்சல்’ என்ற பழைய வார்த்தையைத் தேடிப்பிடித்து புதிதாகச் சூட்டும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி உள்ளது. அது நாடு முழுவதும் அறிவுத்தளத்திலும், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் மிகப்பெரிய கொந்தளிப்பையும் அச்சத்தையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது. இது எமர்ஜென்சிக்கான முன்னோட்டமா… 2019-ல் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன் தயாரிப்பா என்ற கேள்விகளை சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துருவிடம் முன்வைத்தோம். அவர் சொன்ன பதில்..
எமர்ஜென்சியும் இன்றைய நிலையும்…
இந்திரா காந்தி காலத்தில் எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது. `நெருக்கடி நிலை’ என்று வர்ணிக்கப்படும் அந்தக் காலகட்டத்தைவிட, மோசமான நெருக்கடி நிலை நாட்டில் இப்போது நிலவிக்கொண்டிருக்கிறது. இப்போது மட்டுமல்ல… கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நீடிக்கிறது. அதன் வீரியம் கொஞ்சம் கொஞ்சமாக சமயம், கலாசாரம், கல்வி, அறிவுத்தளம் என விரிவடைந்து கொண்டே வருகிறது. அதன் வெளிப்பாடுதான், கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர், செய்தியாளர் எனத் தெலங்கானாவில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதும், அர்பன் நக்சல்’ என்ற வார்த்தையை இந்தியா முழுவதும் பரவவைத்து ஒரு திகிலைக் கிளப்பி இருப்பதும்!

எமர்ஜென்சியைக் கொண்டு வந்த இந்திரா காந்தி, “எதிர்க்கட்சிகள் அனைத்தும் எனக்கு எதிராக ஒன்றாகத் திரண்டுவிட்டன; அவர்களின் சக்கரா வியூகத்தில் நான் அபிமன்யுவைப் போல் மாட்டிக் கொண்டிருக்கிறேன்” என்றார். அதைப்போல இப்போதும், `மாவோயிஸ்டுகள் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளனர்’ என்று காரணம் சொல்லப்பட்டுள்ளது. மேலும், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பி.ஜே.பி-க்கு எதிராக `மகா பந்தன் கூட்டணி’-யை ஏற்படுத்த வேண்டும் என்று பேசுவதை ஆரம்பகட்டத்திலேயே முறியடிக்கவும் இதுபோன்ற அச்சுறுத்தல் நடவடிக்கைகளை மத்திய பி.ஜே.பி அரசு மேற்கொள்கிறது.
எமர்ஜென்சியைவிட இக்கட்டான காலகட்டம்!
இவையெல்லாம், எமர்ஜென்சிக்கும், தற்போதைய நிலைக்கும் உள்ள இணையான சமன்பாடுகள். ஆனால், எமர்ஜென்சியைவிட இன்றைய நிலை மோசமான ஒன்று என்பதற்கும் நிறைய உதாரணங்கள் உள்ளன. எமர்ஜென்சி காலத்தில், 25-க்கும் மேற்பட்ட நக்சல்பாரி இயக்கங்கள் தடை செய்யப்பட்டன. அதோடு ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் தடை செய்யப்பட்டது. எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட பிறகு, அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், இப்போது சட்டப்படி எந்த அமைப்பையும் தடை செய்யவில்லை; எமர்ஜென்சி என்று எதையும் அறிவிக்கவில்லை. ஆனால், அதற்கு முன்பே, எந்த ஆதாரமும் இல்லாமல், அந்த அமைப்புக்கு ஆதரவாகப் பேசினார்கள்… எழுதினார்கள் என்ற அடிப்படையில், இந்திய அளவில் தங்களது துறையில் பெயர் பெற்றவர்களையும், மனித உரிமைக்காகக் குரல் கொடுத்தவர்களையும், அறிவுத்தளத்தில் பணியாற்றியவர்களையும் கைது செய்துள்ளது மகாராஷ்டிரா அரசு. எந்த ஆதாரமும் இல்லாமல், சட்டவிரோதமாக இந்த நடவடிக்கையை எடுக்கின்றனர். அதாவது சட்ட விரோதக் காரியத்தையும், சட்ட விரோதமாகவே செய்கிறார்கள். எமர்ஜென்சியை எந்த நீதிமன்றமும் தவறு என்று சொல்லவில்லை. நாடு முழுவதும் நடந்த போராட்டத்தால், அதைக் கொண்டு வந்த இந்திரா காந்தியே அதை நீக்கினார். அப்போது, `இந்திரா காந்திக்கு, தேர்தல் வந்தால் நாம் வெற்றி பெற்றுவிடுவோம்’ என்ற நம்பிக்கை வந்தது. அதனால், எமர்ஜென்சியை வாபஸ் வாங்கிவிட்டுத் தேர்தல் வைத்தார். அந்தத் தேர்தலில் படுதோல்வியடைந்தார். இப்போது நிலைமை அப்படி இல்லை.
நாடு முழுவதும் வலதுசாரி சிந்தனை!
தற்போது ஆளும் மத்திய அரசு, தேர்தலே வேண்டாம்… மக்களை மதத்தின் பெயரில் கலாசாரத்தின் பெயரில் பிரிக்கும் வேலைகளையும், அறிவுசார்ந்த கல்வித் தளங்கள், மாணவர் அமைப்புகள், ஆசிரியர் அமைப்புகள், பல்கலைக்கழக துணை வேந்தர் பொறுப்புகள் என எல்லா இடத்திலும் வலசாரி சிந்தனை உடையவர்களைக் கொண்டு வந்துவிட்டால், அவர்கள் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் வலதுசாரி சிந்தனைக்குள் கொண்டுவந்துவிடலாம்; அதன்மூலம் காலகாலத்துக்கும் அதிகாரத்தில் நீடிக்கலாம் என்று மத்திய பி.ஜே.பி அரசு திட்டமிடுகிறது. அதற்குத் தடையாக உள்ளவர்களைப் பெயர்களை கெடுக்கும் நோக்கில், அச்சுறுத்தும் நோக்கில் அவர்களைக் கைது செய்கிறது. கருத்துரீதியாக அரசியல் மற்றும் அறிவுத்தளத்தில் இருப்பவர்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல், கலாசாரக் காவலர்களாக மாறி நேரடியாக தாக்குவதையும் இந்த அரசாங்கம் செய்கிறது. அப்படிக் கொல்லப்பட்டவர்கள்தாம், கல்புர்கியும், பன்சாரேவும். இன்னும் அந்தப் பட்டியலில் இன்னும் 34 பேர் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதை நினைத்தால், இன்னும் பயமாக இருக்கிறது.
தேர்தல் நோக்கமல்ல…
பி.ஜே.பி-யைப் பொறுத்தவரையில் அவர்களுக்குத் தேர்தல் முதல் நோக்கமல்ல; அது அவர்களுக்கு இரண்டாம்பட்சம்தான். தற்போது அதிகாரத்தில் இருக்கும் நேரத்தில், அவர்கள் சில துறைகளில் தங்களை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்ள நினைக்கின்றனர். குறிப்பாக, கல்வி, கலாசாரம், சமயம் என்று மூன்று தளங்களில் தங்களின் பிடியை இறுக்கப்பார்க்கின்றனர். இந்தத் தளங்களில் அவர்களால் பி.ஜே.பி-யினரால், கருத்துக்குக் கருத்து, வாதத்துக்கு வாதம் என்று மோதி அவர்களால் ஜெயிக்க முடியாது. அது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான், கருத்துகளைக் கருத்துகளால் வெல்லாமல், அதை வன்முறையின் மூலம் ஜெயிக்கப் பார்க்கின்றனர். இதைத்தான் பாசிசம் செய்தது. பாசிசத்தின் அடிப்படையே இந்தப் போக்குதான்!