ஆறறிவுகளின் ஆராய்ச்சி ! – திருக்குறள் சாயபு –

Vinkmag ad

Ararivu

வணக்கம் யாருக்கு !

 

— திருக்குறள் சாயபு —-

டாக்டர் கே. சையத் அப்துல் கபூர் M.A ( Arabic ), A.M.U

( மதுரை முஃப்தி )

 

 

 

மனித உற்பத்தி :

இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் எத்தனை என்று யாராலும் கணக்கிட முடியாது. எனினும் அவைகளை நீர் வாழ்வன, நில வாழ்வன என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலில் நீரில் வாழும் ஜீவராசிகள் தான் உற்பத்தியாயின. அவைகள் நீரிலிருந்து நிலத்தை தத்தி தத்தி அடைந்து நில வாழ்வனமாக மாறின. இவை அனைத்திலும் நீந்துவன, ஊர்வன, தவ்வுவன, பறப்பன, நடப்பன, தேவர், மக்கள் ஆக ஏழு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. எனவே தான் ஐம்பெருங் காப்பியங்களுள் மேலான காப்பியமாகிய ‘அறப்பளி சுரசதகம்’ என்ற காப்பியத்தில்,

”இக்கடலுலகில் வாழும் உயிரேழு பிறப்பினுள் மிக்க காட்சி பெரு நரசன்மமாய் கருதப் பிறத்தல் அரிது”

எனும் காவியம் காணக்கிடைக்கின்றது. இக்காவியத்தால் சர்வ ஜீவராசிகளுள் மனிதனே மேம்பட்டவன் எனத் தெரிந்து கொள்கிறோம். இதைப் போன்றே டார்வின் தியரியிலும், “The Man is the Great in the World” என்று இருப்பதையும் பார்க்கிறோம். இது போன்றே இஸ்லாமிய ஹதீது கிரந்தங்களிலும் “அஸ்ரஃபுல் மக்லூக்” அதாவது “சர்வ படைப்புகளிலும் மனிதனே மேன்மையான படைப்பாகும். எனக் காண்கிறோம்.

சர்வமொழி கிரந்தங்களிலும் மனிதனே மேம்பட்ட படைப்பாகும். என எடுத்தியம்புகின்றன. எப்படி மேம்பட்டவன்? என்று சற்று சிந்திப்பின் உயரத்தில் மேம்பட்டவனா? இல்லை ஒட்டகம் மனிதனை விட அதிக உயரமாக இருக்கிறது. தடிப்பில் மேம்பட்டவனா? இல்லை. யானை மனிதனை விட அதிக தடிப்பாக இருக்கிறது. ஒட்டகத்தில் மேம்பட்டவனா? இல்லை. மான் மனிதனை விட அதிக வேகமாக ஓடக்கூடியது பறப்பதில் மேம்பட்டவனா? இல்லை. பறவைகளைப் போல மனிதனால் சுயமே பறக்க இயலாது. எனவே பறவைகள் பறப்பதில் மேம்பட்டவை இப்படி இருக்க மனிதன் எப்படி மேம்பட்டவன் ஆவான் என்று கேள்வி எழும் போது அதற்கு தென்னகத்தில் மாத்திரம் ஆறறிவால் மேம்பட்டவன் என கூறப்பட்டு வருகிறது.

ஆறறிவு என்றால் என்ன?

1. ஸ்பரிச உணர்ச்சி (தொடு உணர்ச்சி – தொடுவதின் காரணமாக உணர்ந்து கொள்ளும் உணர்ச்சி)

2. நா உணர்ச்சி (சுவைப்பதின் காரணமாக உணர்ந்து கொள்ளும் உணர்ச்சி)

3. முகரும் உணர்ச்சி (மூக்கால் நுகர்ந்து வாசனைகளை உணர்ந்து கொள்ளும் உணர்ச்சி)

4. பார்வை உணர்ச்சி (பார்ப்பதின் காரணமாக உணர்ந்து கொள்ளும் உணர்ச்சி)

5. செவி உணர்ச்சி (கேட்பதின் காரணமாக உணர்ந்து கொள்ளும் உணர்ச்சி)

இந்த 5 உணர்ச்சிகளுக்கு மேல் மனிதனுக்கு பகுத்தறிவு என்று ஒன்று உண்டு. அதன் காரணமாக ஒரு வஸ்துவை பகுத்து அறியக்கூடிய அறிவு மனிதனுக்கு மட்டும் இருக்கிறது. இத்தகைய பகுத்தறிவு ஏனைய ஜீவராசிகளுக்கு கிடையாது. இதனால் மனிதன் மேம்பட்டவன் என அனேகர் சொல்லிக் கொண்டு இருக்கின்றனர்.

பகுத்தறிவு என்பதற்கு அறிவை பகுத்து ஆராயக்கூடிய சக்தி என்று அனேகர் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். அது திட்டமாக இல்லை எடுத்துக்காட்டாக ஒரு மலரை எடுத்துக்கொண்டு அதனுடைய இதழ்களை பகுத்துக்கொண்டு அதனை ஆராய்ச்சி செய்வதையும் அதனுடைய காம்பை எடுத்துக்கொண்டு அதனை ஆராய்ச்சி செய்வதையும், அந்தக் காம்பின்மேல் இருக்கக்கூடிய மகரந்தங்களை எடுத்துக்கொண்டு அதனை ஆராய்ச்சி செய்வதையும், எந்த செடியில் அந்த மலர் இருக்கின்றதோ அந்த இடத்தையும் பகுத்து ஆராய்வதும் பகுத்தறிவு ஆகும். இதைத்தான் பகுத்தறிவு எனலாம். அறிவை பகுத்துக் கொள்வது பகுத்தறிவு ஆகாது. அறிவை பகுத்துக் கொள்ளவும் முடியாது.

ஆறறிவுகளைப் பற்றி

பகுத்தறிவாளர்களின் கூற்று

 

ஓரறிவு என்பது ஸ்பரிச உணர்ச்சி. அதாவது தொட்டால் தெரிந்து கொள்வது. ஈரறிவு என்பது தொட்டால் உணர்ந்து கொள்ளும் உணர்ச்சியுடன் நாவால் சுவைத்து அறிந்து கொள்வது. மூவறிவு என்பது மேற்கண்ட இரண்டு உணர்ச்சிகளுடன் மூக்கால் முகர்ந்து அறிந்து கொள்வதும் ஆகும். நாலறிவு என்பது மேற்கண்ட மூன்று உணர்ச்சிகளுடன் கண்ணால் பார்த்து அறிந்து கொள்வது. ஐந்தறிவு மேற்கண்ட நான்கு உணர்ச்சிகளுடன் காதால் கேட்டு அறிந்து கொள்வது. ஆறறிவு என்பது பகுத்தறிவு என்று பகுத்தறிவாளர்கள் கூறுகிறார்கள்.

ஆறறிவுகளின் எடுத்துக்காட்டுகள் :

இதற்கு விரிவுரையாக ஓரறிவாகிய தொட்டால் தெரிந்து கொள்ளக் கூடிய அறிவு. ஓரறிவு என்பது புல், பூண்டு, மரம், செடி, கொடி இத்தகைய தாவர இனங்களுக்கு இருக்கிறதாம். தொட்டால் தெரிந்து கொள்ளக்கூடிய அறிவைத் தவிர மற்ற எந்த அறிவும் தாவர வர்க்கங்களுக்கு கிடையாதாம்.

ஈரறிவு என்பது சங்கு, நத்தை, சிப்பி, கிளிஞ்சல் ஆகியவைகளுக்கு தொட்டால் தெரிந்து கொள்வதை பற்றியும், நாவால் சுவைத்து சுவையை அறிந்து கொள்ளும் சக்தியும் இருக்கிறதாம்.

மூவறிவு என்பது கரையான், எறும்பு இவைகளுக்கு தொட்டால் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தியும், நாவால் சுவைத்து ருசியை அறிந்து கொள்ளக்கூடிய சக்தியும், மூக்கால் வாசனையை உணர்ந்து கொள்ளும் சக்தியும் இருக்கிறதாம்.

நான்கறிவு என்பது நண்டு வண்டுகளுக்கு தொட்டால் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தியும், நாவால் ருசிக்கக் கூடிய சக்தியும், மூக்கால் முகர்ந்து தெரிந்து கொள்ளக்கூடிய சக்தியும், இவற்றுடன் சேர்த்து கண்களால் பார்க்கக்கூடிய சக்தியும் இருக்கிறதாம்.

ஐந்தறிவு என்பது மேல்கண்ட நான்கு அறிவாற்றல்களுடன் காதால் கேட்கும் சக்தியும் உள்ளவை. இதற்கு எடுத்துக்காட்டு மிருகங்களும், பறவைகளும் ஆகும் என்று கூறிவிட்டு இறுதியாக மனிதனுக்கு பகுத்தறிவு என்று ஒன்று உண்டு. எனவேதான் மனிதன் சர்வ ஜீவராசிகளை விட மேம்பட்டவன் என்று கூறுகின்றனர். இந்த விளக்கங்கள் தொல்காப்பியத்தில் காணக் கிடைக்கின்றன.

“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே” என்றும்,

“புல்லும் மரமும் ஓரறி வினவே

நந்தும் முரளும் ஈரறி வினவே

சிதலும் எறும்பும் மூவறி வினவே

நண்டும் தும்பியும் நான்கறி வினவே

மாவும் புள்ளும் ஐயறி வினவே

மக்கள் தாமே ஆறறிவுயிரே

பிறவும் உளவே அக்கினைப் பிறப்பே,” என்றும் தொல்காப்பியம் கூறுகிறது.

ஆனால், தற்காலத்து விஞ்ஞான ரீதியல் இது சரியில்லாததாகவே தோன்றுகிறது. எப்படியெனில் தொட்டால் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தி புல், பூண்டுகளுக்கு இருப்பதுடன், சுவைக்கும் தன்மையும் தாவர இனங்களுக்கு உள்ளன. நாம் தாவர இனங்களுக்கு போடும் உரங்களை அவை சுவைக்கின்றன. ஏற்ற உரமாக இருந்தால் அவை நன்றாக சுவைத்து செழித்து வளர்கின்றன. ஏற்ற உரமாக இல்லாவிட்டால் அவை சுவைப்பதில்லை. இதனால் இரண்டாவது அறிவாகிய சுவைக்கும் அறிவு தாவர இனங்களுக்கு உண்டு என்பதை அறிந்து கொள்கிறோம்.

மூன்றாவது அறிவாகிய சுவாசித்து தெரிந்து கொள்ளக்கூடிய அறிவும் தாவரங்களுக்கு உள்ளன. எடுத்துக்காட்டாக பகல் காலங்களில் கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளிவிடுவதும், இரவு நேரங்களில் அத்தாவர இனங்கள் பிராணவாயுவை உட்கொண்டு கரியமில வாயுவை வெளிவிடுவதாகவும் தாவர இயல் விஞ்ஞானத்தை நாம் படித்தே இருக்கின்றோம். மேலும் தாவர இனங்கள் காற்றில் கலந்துள்ள சக்தி பொருட்களை உட்கொள்கின்றன என்றும் தாவர இயல் விஞ்ஞானத்தில் காணக்கிடைக்கின்றது.

இது மட்டிலுமின்றி மேன்மை பொருந்திய முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தென் ஆப்பிரிக்காவில் சுற்றுலா பயணம் செய்யும் பொழுது அங்கு சுமார் 10 அடி உயரமுள்ள சில ராட்சஸ செடிகளை கண்ணுற்றார். அந்த ராட்சஸ செடியில் இலைகள் கிடையாது. காய் பழங்களும் கிடையாது. சாட்டை போன்ற கிளைகள் அச்செடிகளுக்கு உண்டு. அச்செடியின் பக்கத்தில் ஏதேனும் உயிரினம் சென்று விட்டால் அதைப்பார்த்து அந்த ராட்சஸ செடி சிறிய சத்தமிட்டு எல்லா கிளைகளுக்கும் தெரிவிக்கும் அத்தனை சாட்டை போன்ற கிளைகளும் அந்த உயிரினத்தை உணவாகக் கொள்ள ஆயத்தமாகி விடும். இதை தென் ஆப்பிரிக்க வாசிகள் மேன்மை பொருந்திய நேருவுக்கு தெரிவிக்க ஆச்சரியமடைந்து அதனைத் தான் கண்டுகளிக்க அவா கொண்டார். உடனே அங்கிருந்த ஒரு பணியாள் ஒரு நாயைக் கொண்டு வந்து ஒரு பந்தை ராட்சஸ செடியின் பக்கத்தில் உருட்டி விட்டு அந்த நாயை பந்தை எடுத்துக்கொண்டு  வரும்படி ஏவினார். நாய் அந்தப்பந்தைக் கவ்வி வர அந்த ராட்சஸ செடியின் அருகில் சென்றவுடன் அந்த செடி நாயைப் பார்த்ததும் சிறு சத்தமிட்டது. அந்த சாட்டை போன்ற கிளைகள் அத்தனையும் ஆயத்தமாகி விட்டன. அந்த ராட்சஸ செடி தன் கிளைகளால் அந்த நாயை இறுகப்பற்றி அதன் இரத்தத்தைக் குடித்து நாயை சக்கையாக்கி எறிந்து விட்டது. இச்செய்தியை ஜவஹர்லால் நேரு தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தின் போது தன் மகள் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதத்தின் மூலம் நான் அறிகின்றோம்.

அடுத்ததாக டாக்டர் போஸ் என்பவர் தாவரவியலில் ஒரு பெரிய விஞ்ஞானி. அவர் தான் எழுதிய “The Nature” என்ற ஆங்கில புத்தகத்தில் தாவர இனங்களுக்கு காது உண்டு. அவைகள் சங்கீதத்தை ரசிக்கின்றன. தாவர இனங்களுக்கு சங்கீதத்தைப் புகட்டினால் அவை செழிப்பாக வளர்கின்றன. தாவர இனங்களுக்கு கேட்கும் சக்தி உண்டு என்பதை நிரூபித்தார். இதை வாசித்த பல விவசாயிகள் தம்முடைய விவசாய நிலங்களின் ஒரு பகுதியில் வானொலிகளை வைத்து தாவர இனங்களுக்கு சங்கீதத்தை ரசிக்கச் செய்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு வயலிலும் ரேடியோக்கள் ஒலித்ததை பார்த்திருப்பீர்கள். கேட்டிருப்பீர்கள். டாக்டர் போஸ் சொன்னபடி இதனால் தாவர இனங்களும் நன்றாக வளரத்தான் செய்தன. ஆனால் அந்த ஒலிக்கும் வானொலிகளை திருடர்கள் திருடிச் சென்று விடுவதால் இப்போது வானொலிகளை விவசாய நிலத்தில் வைக்கும் வழக்கத்தை நிறுத்தி விட்டனர். இதன் மூலம் செடிகளுக்கும் கேட்கும் சக்தி உண்டு என்பதை அறியலாம்.

பூச்சிகளை பிடித்து உண்ணும் தாவரங்கள் :

இத்தகைய தாவரங்கள் பல உள்ளன. இத்தாவரங்கள் தன் அழகிய பூக்களை விரித்து அதில் வாசனையை உண்டாக்கி பூச்சிகள் தன்னை நாடிவரும்படி இனிமையான தேனையும் இயற்கையிலேயே உண்டாக்கி இருக்கும். அந்த பூவின் அழகைப் பார்த்து வாசனையை நுகர்ந்து அதில் உள்ள தேனை சுவைக்க வரும் வண்டுகளையும், பூச்சிகளையும் வெளிவிடாமல் தன்னுள் கவர்ந்து கொள்ளும். அந்த பூச்சிகள் அங்கிருந்து வெளிவர முடியாமல் அந்த தேனின் வழுவழு தன்மையில் சிக்கி சில மணி நேரங்களில் இறந்து விடுகின்றன. அங்கு இறந்து போன பூச்சிகள் நாளடைவில் மக்கி விடும். மக்கிய பூச்சிகளை அச்செடிகள் உணவாகக் கொள்கின்றன.

மேலும் சில செடிகளின் பூக்களுள் கூர்மையான முட்கள் உள்நோக்கி படிந்திருக்கும். வண்டுகளோ, பூச்சிகளோ, புழுக்களோ அப்பூக்களுக்குள் சென்று விட்டால் திரும்பி வெளியில் சென்று விடாதபடி அப்பூக்களிலுள்ள முட்கள் ஒரு வழிப்பாதையாக செயல்படுகின்றன. இதனால் அவைகளும் சில மணி நேரங்களில் இறந்து மேலும் சில நாட்களில் மக்கி அச்செடிகளுக்கு உணவாகின்றன.

ஈரறிவு உயிரினங்களான சங்கு, நத்தை, சிப்பி போன்ற உயிரினங்களுக்கு தன் நாவால் சுவைக்கும் சக்தி இருக்கிறது. இவைகள் உயிருடன் இருப்பதினால் காற்றை சுவாசிக்க கூடிய தன்மையும் இருப்பதாக நாம் அறிகின்றோம். கடலின் மேல் மழை விழுந்தால் அந்த மழையின் சத்தத்தைக் கேட்டு கடலுக்குள் இருக்கும் சிப்பிகள் கடல் மட்டத்தின் மேல் வந்து தான் இருக்கும் சிப்பியைத் திறந்து வைத்துக் கொள்கின்றன. அதன் சிப்பியின் மேல் ஒரு மழைத்துளி விழுந்தவுடன் சிப்பியை மூடிக்கொண்டு கடலின் ஆழத்தில் அமிழ்ந்து விடுகின்றது. இதனால் நத்தை, சிப்பி போன்றவைகளுக்கு கேட்கும் சக்தியும் இருப்பதாகத் தெரிகின்றது. அது மட்டிலுமின்றி சிப்பிகள் கடலுக்குள் எங்கிருந்து புறப்பட்டு மேலே வந்தனவோ அதே இடத்தில் கடலுக்குள் சென்று படிந்து விடுவதால் பார்க்கும் உணர்வும், சுவைக்கும் உணர்வும் அதற்கு இருக்கின்றன. சிப்பி, நத்தை இவைகள் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதால் இதற்கு மூச்சு வாங்கும் நாசியும் இருப்பதாக புரிந்து கொள்கின்றோம்.

பார்க்கும் திறன்

கரையான், எறும்புகளுக்கு பார்க்கும் திறன் இல்லாமல் இல்லை. எறும்புகள் சாரை, சாரையாக ஊர்ந்து போகும் போது நடுவில் ஒரு தட்டையான வஸ்துவை வைத்து விட்டால் அவை முன்னோக்கி போக முடியாமல் கலைந்து பிரிந்து சிதறுண்டு விடுகின்றன. என்றாலும் அந்த சிதறுதலை சமாளித்து மறுபடியும் அந்த எறும்பு சாரையில் சேர்ந்து கொள்ள ஏனைய எறும்புகளின் காலடி சத்தத்தைக் கேட்டும் சாரையில் மறுபடி சேர்ந்து விடுகின்றன. எண்ணெய் சீனி அல்லது தின்பண்டங்கள் போன்ற பொருட்களை மூடி வைக்காமல் திறந்து வைத்து விட்டால் அத்தின்பண்டங்களை முகர்ந்து அதன்மேல் கூடி அதனை சாப்பிட முற்படுகின்றன. இதைக்கொண்டு எறும்புகளுக்கு ஏனைய எறும்புகள் நடக்கும் பாத சத்தத்தையும் தின்பண்டங்களின் வாசனையையும் முகர்ந்து கொள்ளும் சக்தி இருப்பதாக தெரிந்து கொள்கின்றோம்.

மேலும், இறைவனின் திருத்தூதர்களில் ஒருவராகிய சாலமோன் என்ற சுலைமான் நபி (அலை) தன் காலாட்படைகளுடன் நடந்து வருவதைப் பார்த்த தலைமை எறும்பு ஏனைய எறும்புகளைப் பார்த்து சுலைமான் நபியின் (அலை) படைகள் திரண்டு வருவதால் எங்கள் அனைவரையும் மிதித்து நசுக்கி விடுவார்கள். எனவே, எறும்பு கூட்டாளிகளே உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு உங்கள் பொந்துகளில் நுழைந்து மறைந்து கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் எல்லா எறும்புகளும் தன் பொந்துக்குள் நுழைந்து மறைந்து விட்டன. இதனால் எறும்புகளுக்கும், அதன் இனத்தைச் சேர்ந்த கரையானுக்கும் பார்க்கும் திறனும், கேட்கும் திறனும், முகரும் திறனும் இருப்பதாக நாம் தெரிந்து கொள்கின்றோம். மரக்கட்டைகளை கரையான்கள் கரைக்கின்றன என்றால் சக்தியற்ற அந்த கட்டைகளின் தன்மை தெரிந்து கரையான்கள் அவ்விடத்தில் கூடி விடுகின்றன. ஆனால் தேக்கு மரம் போன்ற கட்டைகளின் மணத்தை சுவாசித்து அக்கட்டைகளைத் தன்னால் கரைக்க முடியாதெனத் தெரிந்து அக்கட்டையைக் கரைக்க கரையான்கள் முயற்சிப்பதில்லை. இவ்வனைத்தையும் நாம் ஊன்றி கவனித்தால் எறும்பு கரையான்களுக்கு பார்க்கும் தன்மையும், கேட்கும் தன்மையும், ருசிக்கும் தன்மையும் இருப்பதாக நாம் தெரிந்து கொள்கிறோம்.

ஆனால் நான்காவது அறிவாகிய கேட்கும் உணர்வு நண்டுகளுக்கும், வண்டுகளுக்கும் இருக்கின்றன. எப்படியெனில் கடல் ஓரங்களில் ஊர்ந்திருக்கும் நண்டுகள் கடலின் அலை ஓசைகள் கேட்டதும் அலை தன்னைக் கடலுக்குள் இழுத்துவிடாதபடி கடல் ஓர மண்ணை இறுகப் பிடித்துக் கொள்கின்றன. வண்டுகள் ஏனைய வண்டுகள் பறக்கும் சத்தத்தைக் கேட்டு அவைகளுடன் சென்று மலர்களில் நுழைந்து மகரந்தங்களை தன் உடலில் ஒட்டிக் கொண்டு அத்துடன் பெண் மலர்களுக்குள் சென்று ஆண் மகரந்தங்களைக் கொட்டி காய், கனிகள், உருவாக உதவுகின்றன. இதனால் வண்டுகளுக்கும் நண்டுகளுக்கும் சத்தத்தைக் கேட்டு செயல்படக்கூடிய தன்மை உண்டு என்பதை நாம் தெரிந்து கொள்கின்றோம்.

மேலும், ஐந்தாவது அறிவாகிய கேட்கும் அறிவு சர்வ மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் இருக்கத்தான் செய்கின்றன. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். நாயை தோ, தோ என்று அழைத்தவுடன் அது ஓடி வருகின்றது. கோழி கோ, கோ என்று கொக்கரித்தவுடன் குஞ்சுகள் கோழியின் பக்கம் ஓடி வருகின்றன. கழுகு, பருந்து முதலியவைகள் கோழிக்குஞ்சை பிடிக்க வரும்பொழுது கோழி பயங்கரமான சத்தத்தை ஒலிக்கும் அதைக்கேட்டு குஞ்சுகள் கோழிகளை நோக்கி ஓடிவந்து அதன் சிறகுகளுக்குள் ஒளிந்து கொள்கின்றன.

பறவைகளிலும் பகுத்தறிவுள்ள பறவைகள் இருக்கத்தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக தூக்கணாங் குருவி மரங்களின் மேல் தன் கூடுகளைக் கட்டும். அந்தக் கூடு 72 முடிச்சுகளால் போடப்பட்டிருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்து இருக்கிறார்கள். அந்த கூட்டுக்குள் தன் குஞ்சுகள் வசிப்பான் வேண்டி ஒரு சிறு பள்ளமான அறையை உண்டாக்கி இருக்கும். அந்த அறைக்கு மேல் ஒரு தட்டையான பகுதியை உண்டாக்கி அதில் சிறு களிமண் துண்டுகளைக் கொண்டு வந்து வைத்து பல மினுக்கட்டான் பூச்சிகளை பிய்த்து பின்பகுதியை மட்டும் களிமண்ணில் ஒட்டி வைக்கும். இதனால் அக்குஞ்சுகள் வெளிச்சத்தில் சந்தோஷமாக இருக்கும். இதுமட்டுமன்றி கழுகு, பருந்து போன்ற பறவைகள் வானளாவி பறந்து கொண்டு தன் கூரிய கண்களால் தரையில் இருக்கும் தனக்குள்ள இரையைப் பார்த்து தன் கூரிய கால்களால் பற்றிக் கொள்ளும். இத்தகைய எடுத்துக்காட்டுகளால் பறவைகளுக்கும் பகுத்தறிவு உண்டு என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

தவிர விலங்கினங்களை எடுத்துக் கொண்டால் நரி, ஓநாய் இவைகள் தன் சமயோசித புத்தியைக் கொண்டு காட்டரசர் என்று சொல்லக்கூடிய சிங்கத்தைக் கூட கொன்றிருக்கின்றன என்பதை நாம் புத்தகங்களில் படித்து தெரிந்திருக்கிறோம். இதனால் பகுத்தறிவு என்பது மனித இனத்திற்கு மட்டுமன்றி தாவர இயல், விலங்கியல், பறவைகள் முதலியவைகளுக்கும் பகுத்தறிவு இருக்கத்தான் செய்கின்றன என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொள்கிறோம்.

இப்பொழுது ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு என்பது எல்லா உயிர்களுக்கும் தனித்தனியே இல்லாமல் ஒருங்கே சேர்ந்து அமைந்து இருக்கின்றன என்பதை இதன் மூலம் நாம் உணர்கிறோம். இந்த அறிவுகளையெல்லாம் கடந்து ஆறறிவு என்பது மனிதனுக்கு மட்டும்தான் இருக்கிறது. அதன் பேர் பகுத்தறிவு. இந்த பகுத்தறிவைக் கொண்டதால்தான் மனிதன் மேம்பட்டவன் என்ற தப்பான கருத்தை மக்களிடத்தே பரப்பி இருக்கின்றனர். இந்த விஞ்ஞான காலத்தில் மேன்மை தங்கிய தொல்காப்பியனார் இருந்திருந்தால் இந்த ஐயறிவைப் பற்றியும் கூறியிருக்க மாட்டார் என்பதே எங்களது திண்ணமான கருத்தாகும்.

மனிதன் எப்படி மேம்பட்டவன்?

மேல் சொன்ன ஐயறிவுகளையும், மனிதனுக்கு உண்டான பகுத்தறிவும் இல்லை என்று சொன்னால் பின் எப்படி மனிதன் மேம்பட்டவன் ஆவான்? என்ற வினா நம் வாசகர்களுக்கு இடையே எழத்தான் செய்யும்.

சகோதரர்களே ! அறிவு என்பது ஒரு கரை காணாத பெருங்கடல் போன்றதாகும். அதனுடைய எல்லை ஆறவுகளில் சொல்லி முடித்தால் அறிவுக்கு கரை போடுவதாக ஆகிவிடும். இந்த ஆறு அறிவுகளை பற்றி நாம் சொல்லிக் கொண்டு இருந்தால் கடலில் உள்ள தண்ணீரில் ஆறு சொட்டுகளை மட்டும் எடுத்து ஒரு புட்டியில் அடக்கி இதுதான் அறிவுக்கடல் என்று சொல்வது போல் ஆகிவிடும். எனவே பகுத்தறிவு என்ற பதத்தை பிரயோகிக்கவே இல்லை ஆனால் அவர் அறிவைப் பற்றிக் கூறும் பொழுது எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் என்று கூறியுள்ளார்.

”எப்பொருள் எத்தன்மையாய் இருப்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு” என்று அறிவு என்ற சொல் மட்டுமே திருக்குறளில் இருக்கிறதே தவிர, பகுத்தறிவு என்ற சொல் ஓரிடத்திலும் கூறப்படவில்லை. மேற்கண்ட இத்தனை ஆராய்ச்சிகளையும், குறள் சான்றுகளும் கொடுத்தபின் பகுத்தறிவு என்ற பதத்தை நாம் அறவே விட்டொழிக்க வேண்டும். ஏனென்றால் பகுத்தறிவு சர்வ ஜீவராசிகளுக்கும் உள்ளன என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

உயிர்

சர்வ ஜீவராசிகளுக்கும் உயிர் இருப்பதைப் போன்றே மனிதனுக்கும் உயிர் இருக்கிறது. ஆனால் அந்த உயிரை அபிவிருத்தி செய்து உயிரை ஆத்மாவாக செய்யக் கூடிய அந்த சக்தி மனிதனுக்கு மட்டுமே உண்டு. மனிதன் தன் உயிரை ஆத்மாவாக மாற்ற 10 படித்தரங்கள் உள்ளன. அவை :

1. இச்சை ஆத்மா

2. நியதி ஆத்மா

3. புற ஆத்மா

4. மகா ஆத்மா

5. இறையியல் ஆத்மா

6. இறையருள் ஆத்மா

7. அந்தரங்க ஆத்மா

8. பரிபூரண ஆத்மா

9. முக்தி பெற்ற ஆத்மா

10. ஆத்ம ஜோதி

இத்தகைய 10 படித்தரங்களை கற்று அறிந்து அதன்படி நடந்து தன்னுடைய உயிரை ஜோதி ஆத்மாவாக மாற்றக்கூடிய சக்தி மனிதனுக்கு மாத்திரமே உண்டு. எனவே தான் மக்களுள் மகாத்மாக்களாகவும் ஜோதி ஆத்மாவைப் பெற்றவர்களாகவும் ஆகி உள்ளார்கள். எனவே இத்தகைய உயிர் மாற்றமாகி ஜோதி ஆத்மாவாக மாறக்கூடிய சக்தி மனிதனுக்கு மட்டுமே உண்டு. மற்ற ஜீவராசிகளுக்கு கிடையாது. எனவே தான் மனிதன் மேம்பட்டவன் ஆவான். மனிதனின் மேம்பாட்டிற்கு பகுத்தறிவு ஒரு பயனும் பயக்காது என புரிந்து கொள்ளலாம்.

குறிப்பு : மேற்கண்ட பத்து வித ஆன்மீக வளர்ச்சியைப் பற்றி பூரணமாக தெரிந்து கொள்ளவும். அதன்படி நடந்து ஆன்மீக முக்தி பெறவும், ஒரு வழிகாட்டியாக இந்நூல் ஆசிரியர் எழுதிய ஆன்ம ஞானமும், ஆன்ம நேயமும் என்ற நூலை வாசித்தால் பரிபூரணமாக உணர்ந்து கொள்ளலாம்.

ஆன்ம ஞானமும் ஆன்ம நேயமும்

மனிதன் பகுத்தறிவால் மேம்பட்டவன் அல்ல. ஆன்மீக ஞானத்தால் தான் மேம்பட்டவன் என்பதைப் பற்றி இப்புத்தகத்தைப் படித்ததின் மூலம் நீங்கள் தெரிந்து கொண்டீர்கள். உயிரைப் பக்குவப்படுத்தி ஒன்பது படித்தரங்களையும் கடந்து, இறுதியில் ஆத்ம ஜோடி வரைக்குமுள்ள படித்தரங்களையும் இப்புத்தகத்தில் எழுதியுள்ளோம்.

அவை :

1.இச்சை ஆத்மா

2. நியதி ஆத்மா

3. புற ஆத்மா

4. மகா ஆத்மா

5. இறையியல் ஆத்மா

6. இறையருள் ஆத்மா

7. அந்தரங்க ஆத்மா

8. பரிபூரண ஆத்மா

9 முக்தி பெற்ற ஆத்மா

10. ஆத்ம ஜோதி

இதனால் ஆன்ம ஞானம் ஓரளவு பெற்று விடலாம். அப்படிப் பெற்றுவிட்டால் தன் சுவனபதியை அடைய முடியும். இந்தப் புத்தகத்தின் விலை ரூபாய் 20 தான். 21 ரூபாய் M.O. செய்தால் புத்தகம் ஒன்று அனுப்பி வைக்கப்படும்.

கிடைக்குமிடம் : சுன்னத் ஜமாஅத் பதிப்பகம்,

90 காஜிமார் தெரு

மதுரை – 625 001

 

வணக்கம் யாருக்கு ?

 

பொதுவாக மக்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் பொழுது “அஸ்ஸலாமு அலைக்கும்” (சாந்தியும் சமாதானமும் உண்டாகுக) என்றும், கிறித்துவர்க, ஆங்கிலேயர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது அந்த நேர காலத்தைக் குறிப்பிட்டு Good Morning, Good After noon, Good evening, Good Night நல்ல காலை, நல்ல நன்பகல், நல்ல மாலை, நல்ல நள்ளிரவு என்று கூறிக்கொள்வது வழக்கம் இந்து நண்பர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது சென்ற காலத்தில் “வந்தனம் ஐயா” என்றும், முகமலர்ச்சியுடன் “வாங்க வாங்க” என்றும் சொல்லி வந்தார்கள். தற்காலத்தே அது விடுபட்டு “வணக்கம் ஐயா” என்று கூறி வருகின்றனர். வானொலி தொலைக்காட்சிகளில் “வணக்கம்’ நன்றி” என்று கூறி வருகின்றனர். இது போக ஆப்த நண்பர்களை சந்தித்து விட்டால் முஸ்லீம்கள் மரியாதை நிமித்தம் தலையில் தொப்பியை அணிந்து கொண்டு “அஸ்ஸலாமு அலைக்கும்” என்பார்கள். ஆங்கிலேயர்கள் அல்லது கிறித்தவர்கள் சந்தித்தால் “ஹேட்” என்ற தொப்பியை தலையிலிருந்து கையில் எடுத்துக்கொண்டு Good Morning Sir என்று சொல்கிறார்கள். இந்து நண்பர்களோ மரியாதை காட்டுவான் வேண்டி தன் மேல் உள்ள அங்கவஸ்திரத்தை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு “வந்தனம்” என்னும் நன்மாராயத்தை சமர்பித்துக் கொள்வார்கள்.

அக்காலத்தில் தமிழ் பாட புத்தகங்களில் அல்லது தமிழ் காவியங்களில் முதன் முதலில் இறை வணக்கம் என்பதை எழுதி விட்டுத்தான் பின்னால் பாடங்களோ அல்லது காவியங்களோ தீட்டப்பட்டு வந்தன. ஆனால் தற்பொழுது வணக்கம் என்ற சொல்லே பரவலாக சமர்பித்துக் கொள்கிறார்கள். வணக்கம் என்ற சொல்லின் அர்த்த புஷ்டியை புரிந்து கொள்ளாமல் எல்லோருக்கும் வணக்கம், வணக்கம் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். வணக்கம் என்ற சொல் அக்காலத்தில் கடவுளுக்கு மட்டிலும் பிரயோகிக்கப்பட்டு வந்தது. வணக்கம் என்று கூறும்பொழுது சாதாரணமாக இருந்து கொண்டு வாயளவில் வணக்கம் என்று கூறிவிடுவதால் மட்டும் அது வணக்கம் ஆகாது. மரியாதை நிமித்தம் அங்கவஸ்திரத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு உடலை பாதிக்கு மேல் (இடுப்பு வரை) முன்னாள் வளைத்து இருகைகளை நெற்றி வரை கூப்பி கடவுள் சன்னிதானத்தில் இருக்கும்போது வணக்கம் என்று சொல்வதே சாலச்சிறந்தது. இதுவே சொல்லும் செயலும் ஒன்றுபட்ட வணக்கமாகும். அக்காலத்தே தமிழர்களின் பண்பும் இத்தகைய முறையில்தான் கையாளப்பட்டது. இடைக்காலத்தில் நாத்திகர்கள் தோன்றி வணக்கம் என்ற சொல்லை மக்களிடத்தே பரவச்செய்து விட்டனர். ஏனெனில் மக்களும் ஒருவருக்கொருவர் கடவுள் போன்றவர்தான் என்று கடவுளுடைய திருநாமத்தை மக்களும் பிரயோகிக்கும் படி செய்து விட்டால் கடவுள் என்ற சொல்லுக்கே அர்த்தம் இருக்காது என்று கருதி ஆதிபராபரனின் திருநாமத்தை விட்டுவிடும் படியான சூழ்நிலையை உண்டாக்கி விட்டனர். இது தமிழ் முறைப்படி மிக மிக அர்த்தமற்ற அவலைச் சொல்லாகவே ஆகிவிட்டது. எனவே அக்காலத்திய தமிழ் மரபுபடி வணக்கம் என்ற சொல் இறைவனுக்கே பொருந்தும். அதனை மக்களுள் பிரயோகிக்கக் கூடாது என்பதனை கருத்தில் கொண்டு மனிதர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது வந்தனம் என்ற சொல்லையே உபயோகித்து வரவேண்டும். குதிரைக்கு குதிரை என்றும் கழுதைக்கு கழுதை என்றும் சொல்வதை விடுத்து கழுதையை குதிரை என்று பெயர் சூட்டுவதைப் போன்றே கடவுளுக்குக் கூற வேண்டிய வணக்கத்தை மக்களுள் பிரயோகித்துக் கொள்வது வணக்கம் என்ற பதத்தின் அர்த்தத்தையே நாம் விட்டுவிட்டு செயல்பட்டு வருகிறோம். மேடைப்பேச்சிலும், தொலைப்பேசிகளிலும், தொலைக்காட்சிகளிலும் வணக்கம் என்று சொல்வதை விட்டு விட்டு வந்தனம், நலம், அல்லது மங்களம் உண்டாகுக என்ற சொற்களில் ஏதேனும் ஒன்றை பிரயோகித்தால் நல்லது.

இதைக்கேட்ட அனேகர் வந்தனம் என்ற சொல் தமிழ்ச் சொல் இல்லையே என்று வாதாடலாம். இந்த வந்தனம் என்ற சொல் பழைய தமிழ் கிரந்தங்களில் நமக்குக் காணக் கிடைக்கின்றன. தசரதரை விட்டு ராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் செல்லும் பொழுது தன் தந்தையாராகிய தசரதருக்கு ராமபிரான் தன் இரு கைகளைக் கூப்பி வந்தனம் என்ற சொல்லையே பிரயோகித்து வனவாசம் ஏகினார் என ராமாயணம் கூறுகிறது. அது மட்டிலுமின்றி ராமர் சீதையை தனியே வனவாசம் செல்வதை இலட்சுமணர் பார்த்து “வந்தனம் அண்ணா ! நானும் உங்கள் இருவர்களுடன் வருவேன். என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டதையும் அதன் பின் ஜானகியின் முன்னால் சென்று லட்சுமணர் தலை குனிந்து நின்று சீதாபிராட்டியின் திருப்பாதங்களை பார்த்தவாறு வந்தனம் என்று கூறிவிட்டு “அம்மையே! நான் தனியாக அயோத்தியில் இருக்க முடியாது. நானும் உங்களுடன் கானகத்திற்கு வர நீங்கள் அண்ணனிடம் கேட்டு அனுமதியுங்கள் என்று வேண்டினார். இதுமட்டிலுமின்றி இராவணன் ஜானகியை பலவந்தமாக எடுத்துச் செல்லும் பொழுது கருடன் குறுக்கிட்டு சீதாபிராட்டியாரை விடுவிக்கும்படி இராவணனிடம் சச்சரவு செய்ய இராவணன் தன் கூரிய வாளால் கருடனுடைய இறகுகளை துண்டாக்கிவிட்டான். கருடன் உயிர் போகும் நிலையில் காட்டில் கிடக்கும் தருவாயில் ராமரும், இலட்சுமணரும் சீதாபிராட்டியாரை தேடிவரும் வேளையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் கருடனைப் பார்த்து, கருடா ! ஜானகியை நீ பார்த்தனையா? என்று கேட்கும் பொழுது, கருடன் இராம இலட்சுமணர் இருவரையும் கண்டு முதலில் வந்தனம் என்ற சொல்லை சமர்ப்பித்து விட்டுத்தான், “ஆம் ! சீதா பிராட்டியாரை இராவணன் பலவந்தமாக கொண்டு சென்றான். நான் அந்த இராவணனைப் பார்த்து சீதாதேவியை விட்டுவிடும்படி வாதாடினேன். அந்த இராவணன் என் இரு இறகுகளையும் வெட்டி விட்டான்” என்று சொல்லி இறுதியாக வந்தனத்தை சமர்ப்பித்து கருடர் உயிர் நீத்தார் என்பதை நாம் ராமாயணத்தில் படிக்கின்றோம். அது மாத்திரம் இன்றி அனுமான் சீதையைத் தேடி இலங்கையிலுள்ள அசோகவனத்தை அடைந்து முதன் முதலில் சீதையைப் பார்த்த மாத்திரத்திலே, “வந்தனம் சீதாதேவியே ! வந்தனம். ஜானகி அம்மையே!” என்று இருமுறை வந்தனம் கூறியதாக கம்பராமாயணத்தில் காணக் கிடைக்கின்றது.

மேலும், வணக்கம் என்ற சொல் திருக்குறளில் எந்த இடத்திலும் திருவள்ளுவனார் பிரயோகிக்க வில்லை என்பதனை இங்கு குறிப்பிடத் தக்கனவாகும். எனவே அன்பு சகோதரர்களே ! ஒரு சாயபு சொல்வதையா நாம் கேட்பது என்று அலட்சியம் ! செய்யாமல் தமிழ் மொழியான வணக்கத்தை இறைவனுக்கே உரிய அர்த்த புஷ்டியான சொல்லை மக்களுள் பிரயோகிப்பதை விட்டுவிட்டு தமிழ் மொழிக்கும், தமிழ் பண்புக்கும், வணக்கம் என்ற சொல்லின் பெருமைக்கும் கட்டுப்பட்டு கடவுளுக்கு வணக்கத்தை சமர்ப்பிப்பதைப் போல மக்களுக்கு சமர்ப்பிக்காது வந்தனம் என்ற சொல்லையே நன்மாராயம் என்ற முறையில் சமர்பித்துக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன். வாசகர்களுக்கும், வந்தனத்தையும் நன்றியையும் சமர்ப்பித்து விட்டு முடித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

K. சையது அப்துல் கபூர்

திருக்குறள் சாயபு

 

 

News

Read Previous

எங்கே அமைதி ………..? ( டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் )

Read Next

திரியே …. மெழுகு திரியே …!

Leave a Reply

Your email address will not be published.