அரிசி உமியிலிருந்து ஆற்றல்

Vinkmag ad
அரிசி உமியிலிருந்து ஆற்றல்
பேராசிரியர் கே. ராஜு

இந்தியாவின் வேளாண்மைக் கழிவுகளில் உமி பிரதானமானது. நெல்லிலிருந்து அரிசி தயாரிக்கும்போது உமி துணைப்பொருளாகக் கிடைக்கிறது. மஞ்சள் பழுப்பு நிறத்தில் உள்ள அரிசியின் மேலோடுதான் இது.  எடை குறைவானது. ஆசியாவில் உற்பத்தியாகும் 770 மில்லியன் டன்கள் உமியில் 120 மில்லியன் டன்கள் இந்தியாவில் மட்டுமே தயாராகிறது. உமியின் வர்த்தகப் பயன்பாடு குறித்து விவசாயிகளிடையே நிலவும் அறியாமையின் காரணமாக உமி வேளாண் கழிவாகக் கருதப்படுகிறது. உமியை எரிப்பது, அல்லது குப்பைக் கழிவாகக் கொட்டுவது என்ற நடைமுறையே உலகம் முழுதும் உள்ள விவசாயிகளிடம் நிலவுகிறது. உமியை எரிப்பதால் வெளியிடப்படும் சல்ஃபர் டையாக்சைட், கார்பன் மானாக்சைட், கார்பன் டையாக்சைட், ஓசோன், மீத்தேன், நைட்ரஜனின் பல்வேறு ஆக்சைடுகள், கார்பன், எளிதில் ஆவியாகக் கூடிய  கூட்டுப் பொருட்கள், வாயுத் திரள்கள் ஆகியவை காற்றுமண்டலத்தில் கலக்கின்றன. இதனால் காற்று மாசுபடுகிறது. மனிதர்களின் உடல்நலத்திற்குப் பாதிப்பு ஏற்படுகிறது. பருவநிலை கெடுவதற்கு இந்த வெளியீடுகளும் காரணமாகின்றன. கணிசமான உயிரிப் பொருட்கள் அடங்கிய உமியை திறந்தவெளியில் கொட்டும்போது, அந்தக் குவியல் சமயங்களில் தானே தீப்பற்றிக் கொள்கிறது. இதனாலும் காற்று மாசுபடுகிறது. இயற்கை வளங்கள் அழியவும் பக்கத்தில் உள்ள வீடுகள், பொருட்கள் தீப்பற்றிக் கொள்ளவும் நேரிடுகிறது. உமியைக் குவித்து வைப்பதால் பூச்சிகளும் எலிகள் போன்ற பிராணிகளும் அடைந்து பொது சுகாதாரம் கெடுகிறது.
உமியை இப்படி வீணடிப்பதற்குப் பதிலாக கீழ்க்கண்ட பயனுள்ள வழிகளில் உபயோகப்படுத்தலாம்.
#  உயிர்த்திரள் ஆற்றலை ( biomass power) உற்பத்தி செய்யும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை உருவாக்க உமியைப் பயன்படுத்தலாம். கிராமங்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சி, வேளாண் வளர்ச்சி, ஆற்றல் உற்பத்தி ஆகியவற்றுக்கு இது துணை புரிகிறது.
# விதைகள், உமி அல்லது வைக்கோல், இலைகள், மரப்பட்டைகள், சிறிய மரத்துண்டுகள் போன்ற பல்வேறு தாவரப் பொருட்களை தாவரங்களின் அடிப்பகுதியில் குவித்து வைத்தால் களைகள் உருவாவதைத் தடுப்பது, மண்ணின் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைப்பது, மண்ணின் ஈரப்பதம் ஆவியாவதைக் குறைப்பது போன்ற நன்மைகள் கிட்டும். அவை சிதைவடையும்போது மண் வளம் செழிக்கும்.
# உமியை வைத்து உயிரிஎத்தனால் தயாரிக்க முடியும். உயிரிஎத்தனால் எதிர்காலத்திற்கான மாற்று எரிபொருட்களில் முக்கியமானது. உமியிலிருந்து செலவு அதிகமின்றி உயிரிகார்பன் தயாரிக்க முடியும். கழிவுநீர் சுத்திகரிப்பில் இந்த கார்பனைப் பயன்படுத்த முடியும். ஜ காற்று குறைவாக அடைக்கப்பட்டுள்ள உருளைவடிவ கொள்கலன்கள், வளிமமாற்றிகள் (gasifiers) என அழைக்கப்படுகின்றன. இவை உமியை பல்வேறு வாயுக்களாக மாற்ற பயன்படுத்தப்படுகின்றன. அப்படி மாற்றப்பட்ட வாயுக்களில் கார்பன் மானாக்சைட், ஹைட்ரஜன், மீத்தேன் ஆகிய மூன்றும் எளிதில் தீப்பற்றக்கூடியவை என்பதால் அவற்றை சமையல் வாயுவுக்கு மாற்றான எரிபொருட்களாகப் பயன்படுத்த முடியும்.
உமிச் சாம்பலின் பயன்கள் :
# உமியின் சாம்பலில் கணிசமாக உள்ள கார்பனிலிருந்து திறன்சேர் கரி (activated charcoal) தயாரிக்க முடியும்.
# உமிச் சாம்பலிலிருந்து பொசோலனா சிமெண்ட் தயாரிக்க முடியும். வர்த்தக சிமெண்ட் துகளின் அளவு 35 மைக்ரான்கள் (ஒரு மைக்ரான் என்பது 1/1000 மில்லிமீட்டர் ) இருக்கும். பொசோலனா சிமெண்ட் துகளின் அளவு 25 மைக்ரான்கள்தான். காங்க்ரீட் இடைவெளிகளை நிரப்ப வர்த்தக சிமெண்டைவிட பொசோலனா சிமெண்ட் மேலானது. மலிவானதும் கூட
#  எஃகுத் தொழிலில் சூடான செங்கற்கள் (furnace bricks) தயாரிக்க உமிச்சாம்பல் பயன்படுகிறது. இந்த செங்கற்கள் 1450 டிகிரி சென்டிகிரேட் வரை உள்ள மிக அதிக வெப்பநிலையைக் கூடத் தாக்குப் பிடிக்க முடியும்.
#  சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களை பூச்சிகளிலிருந்து பாதுகாக்க உமிச்சாம்பலைப் பயன்படுத்த முடியும். மின்சாரத்தின் உதவியின்றி உமிச் சாம்பலைப் பயன்படுத்தி  அசுத்தமான குடிநீரைச் சுத்திகரிக்க முடியும். உமிச் சாம்பலைப் பயன்படுத்தி வளர்ப்புப் பிராணிகளுக்குப் பொருத்தமான படுக்கைகள் தயாரிக்க முடியும். உமிச்சாம்பலிலிருந்து தயாரிக்கப்படும் தட்டு, சல்பர்டையாக்சைடை நன்கு உறிஞ்சக்கூடியது.  அதை நிலக்கரி கொதிகலனில்  கந்தகநீக்கியாகக் பயன்படுத்த முடியும்.
பூமி சூடேறுவதைத் தடுக்க இன்று பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய சிக்கலான காலகட்டத்தில் இருக்கும் நமக்கு பசுமை ஆற்றலைப் பெறுவதற்கு உமியும் அதன் சாம்பலும் கைகொடுக்கத் தயாராக இருக்கின்றன. அதிகம் செலவு வைக்காத எளிதில் கிடைக்கும் இப்பொருட்களைப் பயன்படுத்திக் கொள்வோம்.
(ஆதாரம் : 2016 ஜூன் சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழில் டாக்டர் அனு பிரியா மின்ஹாஸ், டாக்டர் சஞ்சீவ்னா குமாரி எழுதிய கட்டுரை)

News

Read Previous

பரமக்குடி கல்வி மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

Read Next

ஊருக்கு வினியோகிக்க காவிரி குடிநீர்…இல்லை தாராளமாகப் பாயுது வயல்வெளிகளில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *