அன்றாட வாழ்க்கையில் ஆண்டவனுக்கு என்ன வேலை?

Vinkmag ad

அன்றாட வாழ்க்கையில்

ஆண்டவனுக்கு என்ன வேலை?

சிராஜுல் ஹஸன்

 

 

 

அவர் ஒரு கல்லூரி பேராசிரியர், நல்ல படிப்பாளி. சிந்தனையாளர். ஆர்வத்தின் காரணமாக இஸ்லாம் குறித்து படிக்கத் தொடங்கியிருந்தார்.

சில புத்தகங்கள் வாங்குவதற்காக எங்கள் அலுவலகம் வந்திருந்தார்.

“தம்பி… உங்கள் மார்க்க நூல்கள் பலவற்றை நான் படித்திருக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரிபட மாட்டேன் என்கிறது.”என்றார்.

எதுவாக இருந்தாலும் கேளுங்கள் அய்யா, விளக்கம் சொல்லக் காத்திருக்கிறேன் என்றேன்.

மனிதனைப் படைத்தவன் இறைவன். அவன் ஒருவன். அவனுக்கு இணை துணை இல்லை. அவனையே வணங்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இவையெல்லாம் சரிதான். ஆனால் ‘வழிபாடு’ என்னும் எல்லையைத் தாண்டி மனித வாழ்வின் இதர துறைகளில் ஆண்டவன் மூக்கை நுழைக்க என்ன காரணம்? நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆண்டவனுக்கு என்ன வேலை? எடுத்துக்காட்டாக, ஒரு பெண்ணுக்கு ஜிவனாம்சம் தரலாமா, யார் தருவது என்பதில் கூட மதத்தை வலிந்து இழுக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த அம்சம் தான் எனக்கு புரிய மாட்டேன் என்கிறது. என்றார் பேராசிரியர்.

‘இந்தக் கேள்விக்கு விடை சொல்வதற்கு முன்பாக இஸ்லாமிய வாழ்வியலின் அடிப்படைகள் குறித்து நாம் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்”.

“சொல்லுங்கள் தம்பி…”

இஸ்லாம் என்பது சில வழிபாடுகள், சடங்கு சம்பிரதாயங்களின் தொகுப்பு அல்ல, தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் அது ஒரு மதமே அல்ல. இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி, மனித வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் அது வழிகாட்டுகிறது. அந்த வழிகாட்டுதலின் படி வாழும் போது தான் மனிதன் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை அடைய முடியும் என அழுத்தமாகக் கூறுகிறது. அதனால் தான் முஸ்லிம்கள் சின்னச் சின்ன பிரச்சனைகளில் கூட மார்க்கம் என்ன கூறுகிறது என்று பார்க்கிறார்கள்.

வாழ்வின் எல்லாத் துறைகளுக்குமா இஸ்லாம் வழி காட்டுகிறது?” அவருடைய குரலில் வியப்பு.

ஆமாம் ஐயா, அடுக்களை முதல் ஆட்சி பீடம் வரை பள்ளிக்கூடம் முதல் பள்ளிவாசல் வரை; பஞ்சாயத்துப்பிரச்சனை முதல் பன்னாட்டுச் சிக்கல் வரை; குழந்தை பிறப்பு முதல் இறுதிச் சடங்கு வரை; மனிதநேயம் முதம் மனித உரிமை வரை; ஆன்மீகம் முதல் அறிவியல் துறை வரை அது தொடாத துறை இல்லை; காட்டாத வழிமுறையும் இல்லை”.

அடேங்கப்பா… நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இஸ்லாத்தைப் படித்து முடிக்க வாழ்நாளே போதாது போல் இருக்கே. உங்க கிட்ட இன்னைக்கு பேசியதில் ஒரு புதிய செய்தி அறிந்து கொண்டேன். இஸ்லாம் என்பது தொழுகை-நோன்போடு நின்று விடும் மதம் அல்ல; அப்படித்தானே…?

சரியாக சொன்னீர்கள் ஐயா, இறைவன் மிகவும் கருணை மிக்கவன். அதனால் தான் ‘படைத்ததோடு தன் பணி முடிந்து விட்டது. இனி மனிதன் எக்கேடு கெட்டாவது போகட்டும்’ என்று விட்டு விடாமல் வேதங்களையும் தூதர்களையும் அனுப்பித் தொடர்ந்து நமக்கு வழிகாட்டுதல் வழங்கிக் கொண்டே இருந்தான்.

அந்த வரிசையில் இறுதியாக அருளப்பட்ட வேதம் தான் குர்ஆன். இறுதியாக வந்த இறைத்தூதர் தாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

திருக்குர்ஆனின் செயல்வடிவமாக திரு நபி வாழ்ந்து காட்டினார்கள். அப்படித்தானே?

மிகச் சரியாகக் குறிப்பிட்டீர்கள், இப்பொழுது நீங்களே சொல்லுங்கள். மனிதனின் அன்றாட வாழ்வில் ஆண்டவன் தலையிடுவது தவறா?

தவறே இல்லை.அவன் தலையிட்டு வழிகாட்டினால் தான் நம் வாழ்க்கை சீராக அமையும்.

பேராசிரியர் விடை பெற்றார்.

News

Read Previous

மழை

Read Next

அரும்பு

Leave a Reply

Your email address will not be published.