துபாயில் ரஷ்ய பல்கலையில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற தமிழக மருத்துவருக்கு பாராட்டு நிகழ்ச்சி
துபாய் : துபாயில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ரஷ்ய பல்கலையில் மருத்துவ சேவைக்காக கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற தமிழக மருத்துவர் டாக்டர் அமீர்ஜஹானுக்கு பாராட்டு நிகழ்ச்சி 25.09.2013 புதன்கிழமை மாலை நடைபெற்றது.
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் ரஷ்யாவின் ஸ்டவரபோல் பல்கலைக்கழகத்தின் 75 ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளது இந்திய மக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு பெருமையளிப்பதாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.
பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் சமுதாயப் பணிகளை விவரித்த்தார்.
கௌரவ ஆலோசகர் முதுவை சம்சுதீன் தனது துவக்கவுரையில் டாக்டர் அமீர்ஜஹான் அவர்கள் தமிழகத்தின் முதுகுளத்தூர் மண்ணில் பிறந்து ரஷ்ய பல்கலையின் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றிருப்பது பெரு மகிழ்வை அளிக்கிறது என்றார்.
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடை வழங்கி கௌரவிக்கப்பட்டார் டாக்டர் அமீர்ஜஹான்.
டாக்டர் அமீர்ஜஹான் தனது ஏற்புரையில் தனக்கு அளிக்கப்பட்ட பாராட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மருத்துவப் பணியில் தன்னால் இயன்ற வரையில் சேவை மனப்பான்மையுடன் அனைத்து மக்களுக்கும் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும் எத்தகைய மருத்துவம் சார்ந்த ஐயங்களுக்கும் தன்னை எப்பொழுதும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
கௌரவ ஆலோசகர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், துணைத்தலைவர் அஹமது இம்தாதுல்லா, துணைப் பொதுச்செயலாளர் ஹபிப் திவான், தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் சாதிக், இஸ்மாயில், ஷேக் அலி, ஜுபைர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
பொருளாளர் ஏ ஜஹாங்கீர் நன்றி கூறினார்.