மரணம்
அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (16.11.2018)
உங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே நாம் உங்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து (தர்மமாக) செலவு செய்யுங்கள்; (அவ்வாறு செய்யாதவர் தன் மரண தருவாயில்) “என் ரட்சகனே!சமீப தவணையின் பால் என்னை நீ பிறபடுத்த வேண்டாமா? (அவ்வாறு பிற்படுத்தினால்) நான் தர்மம் செய்வேன்; (இன்ன பிற நன்மைகளைச் செய்து) நல்லோர்களில் உள்ளவனாக நான் ஆகிவிடுவேன்”. என்று கூறுவான்.(63:10)
இன்னும் அல்லாஹ், எந்த ஆத்மாவையும்_அதன் தவணை வந்து விட்டால் (அதனைப்) பிற்படுத்தவே மாட்டான்; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு உணர்பவன்.(63:11)
@ஒரு மனிதனின் தக்தீர் என்னும் தலைவிதியை மாற்றும் வல்லமையை தர்மத்திற்கு அல்லாஹ் கொடுத்துள்ளான்; தர்மம் ஒரு மனிதனை முசீபத்திலிருந்தும் காப்பாற்றி விடக்கூடியது என்பதை பல்வேறு ஹதீஸ்களின் மூலம் நாம் காண முடிகிறது.
நம்மிடம் இருக்கும் பொருளில் சிலதை அல்லாஹ்வின் விருப்பத்திற்காக தர்மம் செய்து விடனும்னு நாம் நினைத்து விட்டால், உடனே சிறிதும் தாமதிக்காது அந்த தர்மத்தை செய்து விடவேண்டும். தாமதத்தின் ஒவ்வொரு விநாடியும் நமக்கான நன்மைகளை தூரமாக்கிக் கொண்டே போகும்.
வசதி இருந்தும் தர்மம் செய்யாதவனின் சக்கராத் என்னும் மரணத்தின் தருவாயில், அவனது ஆன்மா படுகின்ற துயரங்களை எண்ணி மரணம் நமக்கு இன்னும் கொஞ்ச காலம் தள்ளிப் போகக்கூடாதா? நம்மிடம் இருக்கும் செல்வம் முழுவதையும் அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்து விடலாமே? என்று ஏங்குமாம்?
ஆனால், அத்தகைய வாய்ப்பினை எந்த மனிதனுக்கும் அல்லாஹ் வழங்குவதில்லை என்பதைப் பற்றித்தான் மேலே உள்ள இறைவசனத்தில் அல்லாஹ் சொல்லிக்காட்டியுள்ளான்.
மரணம் நமக்கு எப்போது? எனத்தெரியாததால், வாய்ப்பு கிடைக்கும் நேரத்திலேயே நமது தர்மங்களை அல்லாஹ்வின் விருப்பத்திற்காக செய்து விடுவோம்; எல்லாம் வல்ல அல்லாஹ், நாம் செய்யும் தர்மங்களை இம்மைக்கும் மறுமைக்குமான நல்ல நசீபை பெற்றுத்தரும் பாதுகாப்பு கேடயமாக்கி வைப்பானாக.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.