பிரபஞ்சத்தின் எல்லை தெரியுமா?

Vinkmag ad
 pirapanjam
அ. முஹம்மது கான் பாகவி
 
நா
ம் வாழும் இந்தப் பூமி சூரியக் குடும்பத்தில் ஒரு கிரகம் அல்லது கோள் என்பது நமக்குத் தெரியும். நிலா பூமியின் துணைக் கோள். இதுவரை மனிதன் கண்டுபிடித்துள்ள சூரியக் குடும்பத்துக் கோள்களையே இன்னும் மனிதனால் முழுமையாக அறிய முடியவில்லை. செயற்கைக் கோள்கள் அனுப்பும் புகைப்படங்களிலிருந்து சில தகவல்களை மனிதனால் ஊகிக்க முடிந்திருக்கிறதே தவிர, அறுதியிட்டுச் சொல்ல ஒன்றும் இல்லை.
 
கோள்களின் எண்ணிக்கை, அவற்றில் உயிரினம் வாழ்வதற்கு வேண்டிய வசதிகள் குறித்த தகவல்கள் போன்ற சிறுசிறு விஷயங்களே. தெளிவற்ற அனுமானங்களாகவும் விஞ்ஞானிகளின் கருத்துவேறுபாட்டிற்கு இலக்கானவையாகவும்தான் இன்றுவரை நீடிக்கின்றன. பில்லியன் கணக்கில் டாலர்களைச் செலவழித்த பிறகுதான் இந்தச் சின்னச் சின்ன விஷயங்கள்கூட மனிதனுக்குத் தெரியவந்துள்ளன.
 
சூரியக் குடும்பத்தைத் தாண்டி நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. அவை சூரியக் குடும்பக் கோள்களைக் காட்டிலும் பன்மடங்குப் பெரியவை என்றும் சொல்கிறார்கள். இந்த நட்சத்திரங்களில் உயிரினம் ஏதேனும் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியிலும் மனிதன் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றானாம்!
 
மனிதன் வசிக்கும் பூமிக்கும் பக்கத்திலுள்ள விண்மீன்களுக்கும் இடையிலேயே பல ஒளியாண்டுகள் தொலைவு இருக்கிறது. ஓர் ஒளியாண்டு என்பது, சுமார் 94.6 இலட்சம் கோடி கி.மீ. ஆகும். (அதாவது ஓராண்டில் ஒளி கடக்கும் தூரம்.) அந்த நட்சத்திரங்களில் ஒன்றில் இருந்து ஒரு சமிக்ஞை நம்மை வந்தடைய 4 ஆண்டுகளாகுமாம்! பிற நட்சத்திரங்களைச் சுற்றிவரும் கிரகங்களில் ஏறத்தாழ 1800மட்டுமே கருவிகளின் உதவியால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
 
வேற்றுக் கிரகங்களிலிருந்து உயிரினங்களின் குரலோ ஒளி அடையாளமோ வேறு எந்தச் சமிக்ஞையோ வருகிறதா என நவீனக் கருவிகள்மூலம் மனிதன் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றான். ஆனால், சிறு முனகல்கூட எங்கிருந்தும் இதுவரை கேட்கவில்லை.
 
பிரபஞ்சம் என்பது அவ்வளவுதானா?
 
ஆக, சூரியன், சூரியனை மையமாகக் கொண்டு சுழலும் பூமி உள்ளிட்ட கோள்கள்,அக்கோள்களுக்கான நிலா போன்ற துணைக்கோள்கள், சிறு நட்சத்திரக் கூட்டம், சூரியக் குடும்பத்தைத் தாண்டி இருக்கும் நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் ஆகியன வரைதான் மனித அறிவு எட்டியுள்ளது; அதுவும் அரைகுறையாக!
 
அப்படியானால், இவைதான் பிரபஞ்சமா? பிரபஞ்சத்தின் எல்லை இத்துடன் முடிந்துவிட்டதா?இவற்றுக்கு அப்பால் ஒன்றுமே கிடையாதா? கிடையாது என மனித ஆராய்ச்சியில் தீர்மானமாகத் தெரிந்துவிட்டதா? விடை தெரியாத வினாக்கள் இவை.
 
உண்மையில், பிரபஞ்சம் அல்லது பேரண்டம் (Universe) என்பது, நட்சத்திரங்கள்(Stars). கோள்கள் அல்லது கிரகங்கள் (Planets),துணைக்கோள்கள் (கிரகத்தைச் சுற்றும் சிறிய கோள்கள்) (Natural Satelites) முதலிய அனைத்தையும் உள்ளடக்கிய எல்லை காண முடியாத பரந்து விரிந்திருக்கும் பெருவெளி ஆகும்.
 
அணுக்களும் அணுத்துகள்களும் அவற்றால் அமைந்திருக்கும் எல்லாப் பொருட்களும் பிரபஞ்சத்தின் பகுதிகளாகும். நிறை விசை(Strong Force), அலை குன்றிய விசை (Weak Force), மின்காந்த விசை (Electromagnetic Force), ஈர்ப்பு விசை (Gravitation) ஆகிய நான்கு அடிப்படை விசைகளுக்குள் அடங்கியதே பிரபஞ்சம்.
 
ஒரு பொருளின் நிலையைத் தொடர்ந்திருக்கச் செய்யவோ, மாற்றவோ,உருவேறுபடுத்தவோ செய்யும் செயலுக்கே‘விசை’ (Force) எனப்படுகிறது. ஒரு நியூட்டன் அளவுள்ள விசையானது, ஒரு கி.கி.எடையுள்ள பொருளில் ஒரு மீட்டர்/1 வினாடி/வினாடி முடுக்கத்தை உண்டாக்கும்.
 
இந்நிலையில், நம் அறிவுக்கு எட்டியுள்ள பிரபஞ்சத்தின் பகுதிகளுக்கு அப்பால் அணுக்களோ அணுக்களால் அமைந்திருக்கும் பொருட்களோ நான்கு அடிப்படை விசைகளுக்குக் கட்டுப்பட்டவையோ இல்லை என்ற முடிவுக்கு மனிதனால் வர முடியுமா? இல்லை என்பதற்கு அறிவியல் ஆதாரம் உண்டா?
 
இறைமறையில் பிரபஞ்சம்
 
 
உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது குறித்து ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் விளக்கினார்கள்:
 

(ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு தண்ணீரைப் படைத்தான். அடுத்து தன் அரியணையை –அர்ஷை படைத்தான்.) அவனது அரியணை தண்ணீரின் மேல் இருந்தது. பிறகு (‘லவ்ஹுல் மஹ்ஃபூழ்’ எனும் பாதுகாப்புப் பலகையைப் படைத்து,) அதில் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்களையும் பூமியையும் படைத்தான். (புகாரீ)

 

திருக்குர்ஆன் கூறுகிறது: உங்கள் இறைவன் அல்லாஹ் ஆவான். அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அரியணைமீது அவன் நிலை கொண்டான். அவன் இரவால் பகலை மூடுகிறான். பகல் இரவை வேகமாகப் பின்தொடர்கிறது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றையும் அவனே படைத்தான். அவை அவனது கட்டளைக்குப் பணிந்துள்ளன. (7:54)

 
அத்துடன் ஏழு வானங்களைப் படைத்ததாகப் பல இடங்களில் அல்லாஹ் அறிவிக்கின்றான். (2:29; 17:44; 23:17; 23:86; 41:12)
 

ஓரிடத்தில், ‘‘ஏழு வானங்களை அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைத்தான் என்பதை நீங்கள் காணவில்லையா? அவற்றில் சந்திரனை ஒளியாக அமைத்தான்;சூரியனை விளக்காக அமைத்தான்” (71:15,16) என்று கூறுகிறது குர்ஆன்.

 
இது மட்டுமன்றி, நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட விண்வெளிப் பயணம் ஆதாரபூர்வமான நபிமொழித் தொகுப்புகளில் பதிவாகியுள்ளது. அப்பயணத்தின் சுருக்கம் இதோ: மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸ் (ஜெருசலேம்); அங்கிருந்து ‘புராக்’ வாகனத்தில் விண்வெளி. அங்கு ஏழு வானங்களில் இறைத்தூதர்களுடன் சந்திப்பு. அடுத்து ‘அல்பைத்துல் மஅமூர்’ எனும் இறையில்லம்(விண்ணுலக கஅபா). ஒவ்வொரு நாளும் அங்கு 70 ஆயிரம் வானவர்கள் உள்ளே நுழைகிறார்கள்;இறையை வழிபடுகிறார்கள்.
 
அதையடுத்து வான் எல்லையான ‘சித்ரத்துல் முன்தஹா’ எனும் இடம். அங்குதான் அல்லாஹ் தன் இறுதித் தூதருக்கு ஐங்காலத் தொழுகையின் கடமையை அறிவித்தான். அதையடுத்து சொர்க்கம் மற்றும் நரகம்.
 
ஏழு வானங்கள் எவை?
 
திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் குறிப்பிடப்படும் இந்த ‘ஏழு வானங்கள்’ என்பது எதைக் குறிக்கிறது என்பதற்குத் தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. நம் கண்களுக்குத் தென்படும் வானம் ஒரு வெட்ட வெளியாகும். மேகம், சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள் தெரியும் கருநீல வெளியே ‘வானம்’ (Sky) எனப்படுகிறது. இது ஒரு சடப் பொருள் அல்ல. ‘ஏழு’ என்ற எண்ணிக்கையும் இதற்குப் பொருந்தாது.
 
அரபி மொழியில் ‘வானம்’ என்பதை ‘சமாஉ’ என்பர். இதற்கு ‘மேலே உள்ளது’ என்ற பொருளும் உண்டு. எனவே, நமக்கு மேலே –அல்லது நம்மைச் சுற்றியுள்ள- பொருளுக்கும் ‘சமாஉ’ எனலாம் இந்த அடிப்படையில், ஏழு வானங்கள் என்பது ஏழு கோள்களான புதன், வெள்ளி, பூமி, சந்திரன்,செவ்வாய், வியாழன், சனி ஆகியவற்றைக் குறிக்கும் என்றும் சூரியன் தனியானது என்றும் சிலர் விளக்கம் அளிப்பதுண்டு. அப்படியானால், சூரியக் குடும்பத்தில் புதிதாகச் சேர்ந்துள்ள யுரேனஸ்,நெப்டியூன், புளூட்டோ ஆகிய மூன்று கோள்களைச் சேர்க்கும்போது வானங்களின் எண்ணிக்கை பத்து ஆகுமே என்ற கேள்வி எழும்.
 
அது மட்டுமன்றி, சந்திரன் பூமியின் துணைக்கோளே தவிர தனிக்கோள் அல்ல. இக்கோள்களில் உயிரினம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதும் உறுதி செய்ப்படவில்லை. நபிமொழியில் குறிப்பிடப்படுகின்ற ‘அல்பைத்துல் மஅமூர்’ எனும் இறையில்லம், வான் எல்லையான ‘சித்ரத்துல் முன்தஹா’ ஆகிய பகுதிகள் இக்கோள்களில்தான் உள்ளனவா என்பதற்கும் விடை கிடையாது.அப்புறம் சொர்க்கம் மற்றும் நரகம் பற்றிய கேள்வியும் எழும்.
 
இதனால், ஏன் இப்படி இருக்கக் கூடாது என்பது அறிஞர்கள் சிலரது கருத்தாகும்! அதாவது மார்க்கம் சொல்கின்ற ஏழு வானங்கள், அவற்றுக்கப்பால் உள்ள இடங்கள் ஆகியனவெல்லாம் இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கப்படாத, இந்தக் கோள்களுக்கும் விண்மீன்களுக்கும் அப்பால் உள்ள பிரமாண்டமான ஏழு அடுக்குகளைக் குறிக்கும் என்று சொல்லலாம்தானே! (அல்லாஹ்வே அறிந்தவன்)
 
அப்படியானால்பிரபஞ்சத்தின் எல்லையை அறிய மனிதன் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதுதானே நிஜம்!

 

News

Read Previous

முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா

Read Next

வாழ்க்கை – Life

Leave a Reply

Your email address will not be published.