நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்

Vinkmag ad

நபிகளார் சொன்ன
கண்ணாடிப் பாடம்

அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி. அடிக்கடி அதைப் பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்.

பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறுகுறுப்பு…!

‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான் இருக்கிறது? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!. ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’ அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பெரியவரை நெருங்கினான்.

“ஐயா…!”

“என்ன தம்பி?”

“உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே?”

“ஆமாம்!”

“அதில் என்ன தெரிகிறது?”

“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்!”

“அப்படியானால் சாதாரணக் கண்ணாடிதானே அது?”

“ஆமாம்!”

“பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

பெரியவர் புன்னகைத்தார்.

“சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய!”

“பாடமா!. கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?”

“அப்படிக் கேள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

எத்துணை ஆழமான உவமை இது!”

“இந்த உவமையில் என்ன இருக்கிறது?. எனக்கு ஒன்றும் புரியவில்லை!”

“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும். எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதை யெல்லாம் இந்தச் சின்ன உவமை மூலம் இறைத்தூதர் சிறப்பாகச் சொல்லி விட்டார்!”

“எப்படி?”

“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?

“ஆமாம்”

“அதே போல் உன் சகோதரனிடம் நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.

இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”

“அடடே…! வெரி இன்ட்ரஸ்டிங்!. அடுத்து…?”

“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போதுதான் உன் குறையைக்காட்டுகிறது.நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். இல்லையா?”

“ஆமாம்!”

“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”

“கிரேட்! அப்புறம்?”

“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”

“இல்லையே…! மாறாக அந்தக் கண்ணாடியைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”

“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும்.

இது கண்ணாடி தரும்
மூன்றாவது பாடம்!”

“ஐயா…! அருமையான விளக்கம். அண்ணல் நபிகளார் கூறிய கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா… அப்பப்பா!”

“யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!”

“இனி கண்ணாடி முன்னால் நின்று என் முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் என் மனத்தை அலங்கரிக்கும்!”

பெரியவர் இளைஞனின் முதுகில் செல்லமாய்த்
தட்டிக் கொடுத்தார்.

News

Read Previous

உறவு

Read Next

தன்னம்பிக்கை கதை

Leave a Reply

Your email address will not be published.