ஒற்றுமைக்கு ஒரு சம்பவம்

Vinkmag ad

ஹஜ் பெருநாள் சிறப்புக் கட்டுரை

ஒற்றுமைக்கு ஒரு சம்பவம்

                 ( ஹாஜி உமர் ஜஹ்பர் )

அகில உலகம் முழுதும் – ஒவ்வொரு நாட்டில் இருந்தும் புறப்பட்டுச் சென்ற புனித ஹாஜிகள் அனைவரும் இன்று புனித கஃபாவை வலம் வந்து புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர் !

சவூதி அரேபிய நாட்டின் ஹிஜாஸ் மாநிலத்தில் புனித மக்கா நகரில் தான் கஃபா புனித ஆலயம் கம்பீரமாக வீற்றிருக்கிறது. கஃபாவின் நீண்ட நெடிய வரலாற்றில் எத்தனையெத்தனையோ சரித்திரச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன !

நபி பெருமானுக்கு நபிப்பட்டம் வழங்கப்படுவதற்கு முன்னொரு நாள் ஒரு சம்பவம் ! ஒரு பேரிடரினால் கஃபா ஆலயத்தை மறு சீரமைப்புச் செய்யும் நிர்பந்தம் ஏற்பட்டது. கஃபா ஆலயத்தின் வடகோடி மூலையில் பதிக்கப்பட்டிருந்த “ஹஜ்ருல் அஸ்வத்” என்னும் மாணிக்கக் கல்லை மீண்டும் ஏற்றி வைக்கும் பணி ஏற்பட்டது.

மக்கா நகரின் புகழ் பெற்ற செல்வந்தர்களும், தலைமை நிலை கொண்ட மாண்பாளர்களும் தனக்கே அந்தப் பணியைச் செய்யும் தகுதியும் உரிமையும் உண்டு என வாதிட்டு நின்றனர் ! வாக்குவாதம் முற்றி முடிவில் ஒரு பெரும் போர் மூண்டுவிடும் அபாய நிலைக்கு வந்து விட்டது.

கட்டுக்கு அடங்காத நிலைமையை உணர்ந்த பெருமானார் ஒரு யோசனையைச் சொன்னார்கள். “அதிகாலைத் தொழுகை (சுப்ஹ்) நிறைவேற்றுவதற்கு கஃபா ஆலயத்திற்கு யார் முதல் நபராக வருகிறாரோ அவருக்கே அந்தத் தகுதியை வழங்கலாம்..!! என்றார்கள். இது நல்ல முடிவுதான் என்று அனைவரும் ஏற்றுச் சென்றனர்.

அதிகாலையில் தானே முதலில் சென்று புனித கஃபா ஆலயத்தில் “ஹஜருல் அஸ்வத்” கல்லை தனது திருக்கரத்தால் தூக்கி வைக்க வேண்டுமென்று உறக்கத்தையும் வெறுத்து ஆயிரம் விழிகள் மூடாமல் விழித்துக் கிடந்தன !

இளந்தென்றல் தாலாட்டும் இனிய காலைப்பொழுதில் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு கஃபா ஆலயம் விரைந்து வந்தனர். ஓடி வந்தவர்களுக்கெல்லாம் விழிப்புருவம் உயர்ந்து நின்றது !

ஆம் ! அனைவருக்கும் முன்னால் பெருமானார் அவர்கள் கஃபா ஆலயத்திற்கு வந்து முதல் நபராக நின்றிருந்தார்கள் !

“சரி தான் ! முஹம்மதே இதற்குப் பொருத்தமானவர் அவரே ஹஜருல் அஸ்வத் கல்லை எடுத்து கஃபா ஆலயத்தில் வைக்கட்டும்” என்று அனைவரும் சம்மதித்தனர்.

“எனக்கு மட்டும் இந்த ஆசை இல்லை எல்லோரின் இதயத்திலும் இதே எண்ணம் குடியிருக்கிறது. எனவே அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த புண்ணியத்தைப் பங்கு கொள்வோம்” என்று கூறிய பெருமானார் தமது திருக்கரத்தால் ஒரு விரிப்பை விரித்து ஹஜருல் அஸ்வது கல்லை அத்துணியின் நடுவில் வைத்து அனைவரும் இந்த விரிப்பின் நுனியைப் பிடித்து தூக்கி வாருங்கள் என்று கூறி கஃபா ஆலயம் அருகில் வந்தவுடன் அந்தப் புனித “ஹஜருல் அஸ்வத்” கல்லைத் தமது புனிதக் கரத்தால் எடுத்து கஃபாவின் மூலைப் பகுதியில் வைத்தார்கள்.

கஃபாவின் திருப்பணியில் பங்கு கொள்ளும் புனிதக் காரியத்தின் போட்டி மனப்பான்மையால் மாபெரும் போர் நிகழ விருந்ததை பெருமானார் தமது சமயோஜிதத்தால் தடுத்து – புனிதக் காரியத்தில் தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தாமே அனுபவித்துக் கொள்ளாமல் அனைவரும் பங்கு கொண்டு புண்ணியம் பெற வாய்ப்பளித்தார்கள்.

அன்று நடந்த இந்தச் சின்னச் சம்பவம் இன்றும் நமது சமுதாயத்திற்கும், நமது நாட்டிற்கும் பல படிப்பினைகளை வழங்கி ஒற்றுமைக்கும் மகிழ்வுக்கும் வெற்றிக்கும் வழி காட்டட்டுமே !

News

Read Previous

முன்னணியில் மூவர்

Read Next

வினாயக சதுர்த்தி

Leave a Reply

Your email address will not be published.