இன்று ஒரு கதை…

Vinkmag ad

இன்று  ஒரு கதை…

 

தன் அப்பாவுடன் கன்னியாகுமரி கடற்கரையோர கடைத் தெருக்களில் உற்சாகமாய் நடை போட்டுக் கொண்டிருந்தான் அந்தச் சிறுவன்.

‘‘அப்பா… பாருங்கப்பா! சிப்பிகள்ல செய்திருக்கிற மயில், கிளி எல்லாமே அழகாயிருக்குப்பா!’’

‘‘ஆமாம்பா!’’

‘‘இந்தக் கடற்கரை காற்று, கன்னியாகுமரி எல்லாமே பிடிச்சிருக்குப்பா எனக்கு!’’

‘‘அப்பா, ஏதாவது கதை சொல்லுங்க!’’

அப்பா ஆரம்பித்தார். ‘‘அது ஒரு சின்ன கதைதான். அப்ப நாங்க பள்ளிக்கூடம் படிச்சிட்டு இருந்தோம். அப்பாவுக்கு முன் பல்லு விழுந்து முளைச்சி வளர்ந்திருந்தது.’’

‘‘அப்புறம்?’’

‘‘அப்போ நாங்க எல்லாம் பள்ளிக்கூடம் முடிஞ்ச பிறகு கபடி விளையாடிட்டு இருந்தோம். நல்லா இருட்டிப் போச்சு. வீட்டுக்குப் போகவே இல்ல. போய் சர்பத் குடிக்கலாம்னு ஒரு பையன் சொன்னான். அப்பல்லாம் சர்பத் ஒரு டம்ளர் ஒரு ரூபாய்தான்.’’

‘‘அப்புறம்?’’

‘‘சர்பத் வாங்க நாங்க நாலு பேரு நிற்கும்போது கடைக்காரர் திரும்பி ஐஸ்கட்டி எடுத்தார். அப்போ ஒரு பையன் ரெண்டு கோல்டு ஸ்பாட் பாட்டிலை எடுத்து சாப்பாட்டு கூடைக்குள்ள போட்டு மேல துணி போட்டு மூடிட்டான்!’’

‘‘கோல்டு ஸ்பாட்னா என்னப்பா?’’

‘‘இப்ப சுர்ருன்னு ஆரஞ்ச் ட்ரிங்க் குடிக்கிறீங்க இல்ல… அது மாதிரி அப்ப கோல்டு ஸ்பாட்!’’

‘‘சரி, சொல்லுங்க!’’

‘‘திருடின உடனே எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். தூக்கிட்டு ஒரே ஓட்டமா ஒடினோம். எங்க பள்ளிக்கூடத்துல பெரிய வாகை மரம் இருக்கும். அதுக்குப் பின்னாடி போனா யாரும் கண்டுபிடிக்க முடியாது. அங்க போய் ஒளிஞ்சி நின்னுக்கிட்டோம். நாலு பேரு, ரெண்டு கோல்டு ஸ்பாட். சீக்கிரம் குடிக்க அவசரப் படுறோம்!’’

‘‘அப்புறம்?’’

‘‘கோல்ட் ஸ்பாட் திருடினோம். ஆனா அதை திறக்கிற ஓப்பனர் திருடலையே! இப்ப எப்படி அதைத் திறக்கிறதுங்கிற பிரச்னை வந்துச்சு. ஒருத்தன் கல்லை வைத்து தட்டப் போனான். தடுத்து விட்டோம்.

இன்னொருவன் பாட்டில் மூடியை பல்லால் கடித்து எடுக்க முயற்சி செய்தான். ஆவேசமான முயற்சி அது. அவன் கால் வாசி பல் உடைந்து விட்டது. அதுவும் முன் பல். பயத்துல அவன் கத்தினான்.’’

‘‘அச்சச்சோ!’’

‘‘உடனே எனக்குக் கோபம் வந்தது. இந்த பாட்டில் மூடியைத் திறக்க இவ்வளவு கஷ்டமான்னு, ஒரு உடைந்த மரக்கிளையில் மூடியின் ஓரத்தை வைத்து பாட்டிலை வேகமா இழுத்தேன். பாட்டில் படீரென உடைந்தது. உடைந்து என் கையில் குத்தியது. கை கிழிந்து சதை தொங்கியது. ரத்தம் பெருக்கெடுத்து தரையில் சொட்டிக் கொண்டே இருந்தது.’’

‘‘ரொம்ப வலிச்சுதா அப்பா?’’

‘‘சரியான வலி. நண்பர்கள் எல்லாரும் பதறிட்டாங்க. உடனே என்னை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனாங்க. அவரு ‘இது எப்படி பட்டது’ன்னு விசாரிச்சாரு. நாங்க உண்மையை மறைச்சோம்.

எப்படியோ மறைச்சி கையில கட்டு போட்டுட்டு வீட்டுக்குப் போகலாம்னு கிளம்பும்போது, அங்க வாகை மரம் பக்கத்துல உடைஞ்சிருக்கிற கோல்டு ஸ்பாட் பாட்டில்களை மறைக்கலையேன்னு ஞாபகம் வந்துச்சு. உடனே நாலு பேரும் பள்ளிக்கூடத்துக்குப் போனோம். ரொம்ப இருட்டா இருந்தது. எங்க பள்ளிக்கூட மைதானம் பெரிசுங்கிறதால, இருட்டானா சில சமூக விரோதிகள் மது அருந்திட்டு இருப்பாங்க. நாங்க பாட்டில தேடிக் கண்டுபிடிச்சி மறைச்சிட்டு பார்த்ததும், அவங்க எங்களை நெருங்கிட்டாங்க. பிடிச்சி பணம் இருக்கான்னு கேட்டு மிரட்டினாங்க. நாங்க அழுதுக்கிட்டே எங்கள விட்டுருங்கன்னு கெஞ்சினோம்.’’

‘‘ம்ம்ம்…’’

‘‘எப்படியோ சமாளிச்சு வீடு வந்தா அங்க என் அப்பா, அம்மா கவலையோட காத்திருந்தாங்க. என் கையில பெரிய கட்டு இருக்கிறதை பார்த்து என் அப்பா, அதான் உன் தாத்தா அப்படியே மயங்கி விழுந்துட்டாரு.

அப்புறம் தாத்தாவை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போய் இரவு அங்க தங்க வச்சி, இரவெல்லாம் தூங்காம மறுநாள் பள்ளிக்கூடம் போகும்போது எனக்கு தோணுச்சு.’’

‘‘என்ன தோணுச்சு?’’

‘‘கூல் ட்ரிங்ஸ் குடிக்கணும்னு கேட்டிருந்தா, என் அப்பா நிச்சயமா காசு தந்திருப்பாரு. பிறகு ஏன் இந்த திருட்டுப் புத்தி வந்தது? இப்படி திருடுறதுனால எவ்வளவு துன்பம் எனக்கும் நண்பர்களுக்கும் வந்ததுன்னு நினைச்சேன்.’’

‘‘கையில இருக்கிற இந்தத் தழும்பு அந்த பாட்டில் குத்தினதாப்பா?’’

‘‘ஆமா!’’

மகன் அப்பாவின் கைகளை தடவிப் பார்த்தான். நின்றவன், திடீரென்று வந்த பாதையிலேயே ஓடினான்.

அப்பா கத்தினார். ‘‘எங்க போறப்பா?’’

‘‘அப்பா நான் கடைத்தெருவுல வரும்போது சின்னதா ஒரு சிப்பில செய்த மயிலை ரகசியமா திருடிட்டேன். திருடுறது எவ்வளவு தப்புன்னு நீங்க சொல்லிட்டீங்க. நான் புரிஞ்சிக்கிட்டேன். இந்த மயிலை நானே கடைக்காரர்கிட்ட கொடுத்து மன்னிப்பு கேட்டுட்டு வந்திடறேன்’’ என்று ஓடினான்.

‘நீ சிப்பி மயிலை எடுத்ததை உனக்குத் தெரியாமல் நான் பார்த்தேன் மகனே! அதற்காகத்தானே என் வாழ்க்கை திருட்டு சம்பவத்தை உனக்கு நீட்டி முழக்கிச் சொன்னேன்!’

மனதுக்குள் சொன்ன அப்பா, திருந்தி ஓடும் மகன் பின்னால் மகிழ்ச்சியாக ஓட ஆரம்பித்தார்.

 

News

Read Previous

கூடேறும் பூக்கள்…

Read Next

உங்களின் சிறந்த நண்பர்

Leave a Reply

Your email address will not be published.