ராமநாதபுரத்தில் சிறு, குறுந்தொழில்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
ராமநாதபுரம், செப். 23–
ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் சிறு குறு தொழில் தொடங்க அனுமதிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விரைவாக தொழில் உற்பத்தியை தொடங்குவதற்கு, உள்ளாட்சி அமைப்புகள், தமிழ்நாடு மின்சார வாரியம், தீயணைப்புத்துறை, பொது சுகாதாரத்துறை போன்ற அரசு அமைப்புகளிடம் இருந்து தேவையான உரிமங்கள், அனுமதிகள் மற்றும் ஒப்புதல்கள் ஆகியவற்றை உரிய காலத்துக்குள் பெறுவது அவசியம் ஆகும்.
இந்த அனைத்து விதமான உரிமங்கள் மற்றும் அனுமதிகளை சிரமமின்றி பெறுவதற்கு ஏதுவாக மாவட்ட தொழில் மையம் மூலமாக விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பலாம். அவ்வாறு இல்லாமல் தொழில் நிறுவனங்கள் அரசு அமைப்புகளில் உரிமம் மற்றும் அனுமதிக்காக தாமாகவே விண்ணப்பித்து உரிய உரிமம் மற்றும் அனுமதியை பெறுவதில் இடர்பாடுகள் ஏற்பட்டாலோ, அல்லது காலதாமதம் ஏற்பட்டாலோ அதனை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடை பெறவுள்ள ஒருமுனை தீர்வுக்குழு கூட்டத்தில் வைத்து உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு உரிமங்கள் மற்றும் அனுமதிகளை விரைவாக சம்மந்தப்பட்ட அமைப்புகளிடம் இருந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது 04567– 230497, 232329 என்ற தொலைபேசி எண்கள் மூலம் தொடர்புகொண்டு கூடுதல் விபரங்கள் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.