மின் கட்டணத்தை அஞ்சலகங்களிலும் செலுத்தலாம்
மின் நுகர்வோர் தங்களது மின் கட்டணத்தை அஞ்சல் அலுவலகங்கள் மூலமும் ஆன்லைன் மூலமும் செலுத்தலாம் என மின் வாரிய செயற்பொறியாளர் ஜி. யோகானந்தன் புதன்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மின் நுகர்வோர் தாங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை எந்த உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் வேண்டுமானாலும் செலுத்திக் கொள்ளலாம்.
ஒரே இடத்தில் வரிசையில் நின்று கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மேலும் மின் நுகர்வோர் வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மூலமும் ஆன்லைன் மூலமும் செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மின்நுகர்வோர் தங்களது கைபேசி எண்ணை சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டால் சம்பந்தப்பட்ட மின் இணைப்பிற்கான மின் கட்டணத் தொகை, கட்டணத்தை செலுத்துவதற்கான கடைசி தேதி ஆகியவை குறித்த விவரம் மின் நுகர்வோரின் கைபேசிக்கு தெரிவிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அச்செய்திக்குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.