முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி விளைச்சல் அமோகம் அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை
முதுகுளத்தூர்,: முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பருத்தியை அரசே விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதுகுளத்தூர் பகுதியில் உள்ள காக்கூர், புளியங்குடி, வெலங்குளத்தூர், வென்னீர்வாய்கால், அலங்கனூர், திருவரங்கம், மீசல், கே.தேவர்புரம், குமாரக்குறிச்சி, உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் பருத்தி பயிரிட்டுள்ளனர். கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டதால், பருத்தி விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டது. விலை யும் குறைவாக இருந்தது.
இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கும் மேலாக கோடை மழை பெய்ததால் கண்மாய், ஊரணி, நீர்நிலைகளில் ஓரளவு தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் பருத்தி பயிரிடுவதில் ஆர்வம் காட்டினர். தற்போது இப்பகுதிகளில் பருத்தி நன்கு விளைந்துள்ளது. விலையும் ஓரளவு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இருப்பினும் இடைத்தரகர்களால் தங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த பருத்தி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலையை குறைத்து கொள்முதல் செய்கின்றனர் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர். எனவே நெல்லை அரசே கொள்முதல் செய்வது போல, பருத்தியையும் அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
புளியங்குடியை சேர்ந்த விவசாயி தனசேகரன் கூறுகையில், “பருவமழை இல்லாததால் கடந்த 3 ஆண்டுகளாக நெல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெய்த கோடை மழையை நம்பி விவசாயிகள் ஏராளமானோர் பருத்தி பயிரிட்டுள்ளனர். பருத்தி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. ஆனால் முதுகுளத்தூர், பரமக்குடி பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் தங்களுக்குள் விலை நிர்ணயம் செய்து கொண்டு, விவசாயிகளிடம் பருத்தி கொள்முதல் செய்கின்றனர். இதனால் எங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. பருத்தியை அரசே நேரடி யாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும்“ என்றார்.