பள்ளி மாணவர் இறப்பில் சந்தேகம்: புதைக்கப்பட்ட உடல் பரிசோதனைக்காக தோண்டி எடுப்பு
முதுகுளத்தூர் அருகே, பள்ளி மாணவர் இறப்பில் சந்தேகம் அடைந்த போலீஸார், புதைத்த உடலை செவ்வாய்க்கிழமை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், தேரிருவேலி அருகே உள்ள அணிகுருந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் செய்யது ரசாக். இவரது மனைவி மகரியா பேகம். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள்.
இந்நிலையில், செய்யது ரசாக் வேறு திருமணம் முடித்துக்கொண்டு, வெளியூரில் வசித்து வருகிறார். அணிகுருந்தான் கிராமத்தில் மகரியா பேகம் வசித்து வருகிறார்.
மகரியா பேகத்தின் மூத்த மகன் முகம்மது சித்திக் (17), தேரிருவேலியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், கடந்த ஜூன் 4 ஆம் தேதி இரவு தனது வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
அதையடுத்து, காவல் துறைக்கு தெரியாமல் இறந்த மாணவரின் பெற்றோர்கள் சடலத்தை பள்ளிவாசல் மயானத்தில் புதைத்து விட்டனர்.
சந்தேகமடைந்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், முதுகுளத்தூர் வட்டாட்சியர் கே.கே. கோவிந்தனிடம் இது பற்றி புகார் தெரிவித்தார். அதன்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின்பேரில், வட்டாட்சியர் கே.கே. கோவிந்தன், டி.எஸ்.பி. நடராஜன் முன்னிலையில், மதுரை மருத்துவர்களான சந்திரசேகர், மணிகண்டன் உள்ளிடோர் புதைக்கப்பட்ட மாணவரின் சடலத்தை, 46 நாள்களுக்குப் பிறகு தோண்டி எடுத்தனர். பின்னர், உடலுறுப்புகளில் சில பாகங்களை பரிசோதனைக்காக மருத்துவக் குழுவினர் எடுத்துச் சென்றனர்.
சம்பவ இடத்தில், வருவாய் ஆய்வாளர் முருகராஜ், காவல் துறை ஆய்வாளர் மோகன், சார்பு-ஆய்வாளர் அருள்பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் பள்ளிவாசல் ஜமாத் தலைவர்களும், கிராமப் பொதுமக்களும் இருந்தனர்.