உயர்ந்திடுவோம் வாழ்வினிலே !
உயர்ந்திடுவோம் வாழ்வினிலே !
[ எம்.ஜெயராமசர்மா … மெல்பேண் ]
அன்புக் குழந்தைகளே
ஆசையுடன் கேளுங்கள்
அமுதான தமிழ்மொழியில்
அமைந்த ஒருநூல்பற்றி
எல்லோரும் வாழ்வதற்கு
ஏற்றபல கருத்துக்களை
இங்கிதமாய் கூறிநிற்கும்
ஏற்றமிகு நூலாகும்
வள்ளுவனார் எனுமாசான்
வழங்கிவிட்ட நூலாகும்
தெள்ளுதமிழ் மொழியினிலே
திகழுகின்ற திருக்குறளாம்
அள்ளஅள்ளக் குறையாத
அரியபல கருக்களையும்
நல்லதமிழ் மொழியினிலே
நமக்களித்து நிற்கிறது
கல்விபற்றிச் சொல்கிறது
செல்வம்பற்றிச் சொல்கிறது
நல்லஅறம் என்னவென்று
நயமுடனே சொல்கிறது
உள்ளமது உயர்வடைய
நல்லவழி சொல்லும்நூல்
உணர்வுடனே கற்றுவிடின்
உயர்ந்திடுவோம் வாழ்வினிலே
ஈரடியால் பலவற்றை
இலகுவாய் விளக்குவது
வாங்கிநீர் படித்துவிடின்
வாழ்வாங்கு வாழ்ந்திடலாம்
பிள்ளைகளே படியுங்கள்
நல்லவுள்ளம் கொண்டிடுவீர்
வள்ளுவரின் குறளுமக்கு
வளம்நிறையத் தந்துநிற்கும் !
Tags: உயர்ந்திடு