கிடாத்திருக்கைக்கு அரசு பஸ் “கட்’
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே ஏனாதி, கிடாத்திருக்கை ஆகிய இரு கிராம இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலால், அரசு பஸ் நிறுத்தபட்டுள்ளது. 15 நாட்களாக 10 கி.மீ., சுற்றி பயணிக்கும் அவலம் தொடர்கிறது.முதுகுளத்தூரிலிருந்து ஏனாதி வழியாக கிடாத்திருக்கைக்கு தினமும் ஆறு முறை அரசு பஸ் இயக்கப்படுகிறது.
ஒரு மாதத்திற்கு முன், பள்ளி முடிந்து அரசு பஸ்சில் ஊர் திரும்பிய ஏனாதி பள்ளி மாணவியை, கிடாத்திருக்கை மாணவர்கள் கேலி செய்தனர். இதில் ஏற்பட்ட பகையால், இரு கிராம இளைஞர்கள் அடிக்கடி மோதிக்கொண்டனர். தேவர்குறிச்சியில் நடந்த கபடி போட்டியின்போது, ஏனாதி கிராமத்தை சேர்ந்த ஆறு வீரர்கள், கிடாத்திருக்கை இளைஞர்களால் தாக்கப்பட்டனர். இதுகுறித்து கிடாத்திருக்கையை சேர்ந்த 21 பேர் மீது, வழக்கு பதிவு செய்யபட்டது.
முதுகுளத்தூரிலிருந்து ஏனாதி வழியாக கிடாத்திருக்கைக்கு சென்ற, அரசு பஸ்சை, ஏனாதி கிராமத்தினர் வழிமறித்து, பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோரை தாக்கினர். மேலும் இவ்வழியாக கிடாத்திருக்கையை சேர்ந்தவர்கள் பயணிக்கக்கூடாது, கிடாத்திருக்கைக்கு பஸ் இயக்கக்கூடாது என, ஏனாதியை சேர்ந்த சிலர் கட்டுப்பாடு விதித்தனர்.
இதனால், 15 நாள்களாக அரசு பஸ் நிறுத்தபட்டுள்ளது. ஏனாதி மாணவர்கள் 3 கி.மீ., தூரமும், கிடாத்திருக்கை மாணவர்கள் சித்திரங்குடி, பேரையூர் வழியாக 10 கி.மீ., சுற்றி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க, சரக்கு வாகனங்களில் பயணிக்கின்றனர்.
முதுகுளத்தூர் போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் சரவணன்: போலீசார் தான் பஸ்சை நிறுத்தக்கூறினர். போலீஸ் பாதுகாப்பு அளித்தால் பஸ் இயக்கப்படும், என்றார்.
ஏ.எஸ்.பி., விக்ரமன்: இரு கிராமத்தினரிடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்படும். சுமூக உடன்பாடு ஏற்பட்டால் பஸ் இயக்கப்படும், என்றார்.