பறவையின் (ம)ரணம்
(பனி சூழ்ந்த பகலில் ஒருநாள் படபடத்து வந்து அமர்ந்த பறவையைப் பார்த்த போது என் மனநிலை)
பறவையின் (ம)ரணம்
————————_——————
பனித்தூவல் ரம்மியம்
பறவைக்கு அது ரணம்
பனிப் பொழிவிலிருந்து
பயந்து வந்த வண்ணப்
பறவை என் வீட்டுப்
பரணில் அடைக்கலம்
பரிதாபம் அதன் கண்களில்
பட்டினியோ பல நாட்கள்
பண்னிசைத்த அதன் குரல்
பலவீனமாய் உடைந்து
பாவமாய் ஒலித்தது அது
பண் முகாரி ராகமாய் ஓய்ந்தது
உதவ வேண்டும் என்ற
உந்துதல் மனதின்
உள்ளே சிறகடித்தது
உடனே பறந்து விடுமோ என
உள்ளூர அச்சம் தடுத்தது
உணர்வுக்கு மதிப்பளித்து
உயரத்தில் வாழட்டுமே என
உதவிட நான் முயலவில்லை
உணவின்றி அது இருந்திடுமா?
உறவுகளை உதறி வாழ்ந்திடுமா?
எத்தனை நாட்கள் இங்கிருக்கும்
என்னோடு இசை பயிலும்
சூழ்நிலை மாறும் வரை
சூழ்ந்த பனி விலகும் வரை
இறை தேடி வந்த அதனை
இரவு பகலாய் காணாமல்
இணை துணை தேடாதா?
இமையா விழிகள் வாடாதா ?
விரிகதிர்களே!விழித் தெழுங்கள்!
விடியலில் விழுமியங்கள்
விண்மீனாய் வெளிச்சம் தரட்டும்!
விழுந்த பனியும் உருகட்டும்
விழிகளின் கண்ணீர் கரையட்டும்!
வழி தவறிய பறவையின்
வாழ்வியல் மலரட்டும்!
வசிப்பிடம் அது தேடி ஓடி
வளமாய் நலமாய் வாழட்டும்!
படபடக்கும் சிறகுகளில்
பரவசம் மலரட்டும்!
பார்க்கும் என் நெஞ்சில்
பால் வார்க்கட்டும்!
கவின்முகில் மு முகமது யூசுப் உடன்குடி