சோ ராமசாமி அவர்களுக்கு அஞ்சலி
சோ ராமசாமி அவர்களுக்கு அஞ்சலி
அனைவர் மேலும் அன்பு – தொடுப்பார்
அனைவர் மேலும் அம்பு
அனைவருடனும் நட்பு – வைப்பார்
அனைவருக்கும் ஆப்பு
தூக்கி வைப்பார் ஒருநாள் – மாறினால்
தாக்கி எழுதுவார் மறுநாள் .
நையாண்டி செய்வதில் யாரையும் -விட்டு
வையான்டி என்பார் ,அதை வையமே ரசிக்கும்.
எதிர்ப்புகள் எத்தனை வந்தபோதும்
எதிர்த்துப் புகழ் பெற்ற இரும்பு மனிதர்
கட்டுக்கதைகளும் கவர்ச்சியும் இன்றி
கட்டுக்கோப்பாய் பத்திரிக்கை நடத்தியவர்
தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதையும்
தொகுதிக்கே செலவு செய்த நேர்மையாளர் .
ஆதாரமில்லாமல் எதையும்
ஆதாயத்திற்காக எழுதாதவர் .
ஆன்மிகத்தை ஆழ்ந்து உணர்ந்தவர்
அரசியலை ஆய்ந்து அறிந்தவர் .
ஆட்சி மாற்றங்களில் பெரும்பங்கு வகித்தவர்.
சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைத்தவர் .
பன்முகம் கொண்ட பண்பாளர்
இன்முகம் கொண்ட இனியவர்
பகைச்சுவையின்றி நாட்டுநடப்பை
நகைச்சுவையாக உரைப்பவர்.
பண்பட்ட மனத்தினர் – யாரையும்
புண்படுத்தாத குணத்தினர் .
அரசியல் , பத்திரிகை, நாடகம், சினிமா
அனைத்திலும் முத்திரை பதித்தவர் .
சகல கலா வல்லவரென்று
சகலரும் போற்ற வாழ்ந்தவர்.
நேர்மை உறங்கும் நேரம்
தானும் உறங்கிவிட்டாரோ !
இறைவன் இறந்துவிட்டானா – பார்க்க
இறைவனடிக்கே சென்றுவிட்டார்.
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
Tags: அஞ்சலி சோ ராமசாமி