பெற்றோர்களின் நற்பண்புகளை தொடர்வோம்!
பெற்றோர்களின் நற்பண்புகளை தொடர்வோம்!
டேய்…ஜஹாங்கீர்,உன்னைய உங்க உம்மா கூப்பிடுறாங்கடா என்ற எனது நண்பனின் அழைப்பின் போது தான் அன்று வெள்ளிக்கிழமை இரவு என்பது நினைவுக்கு வந்தது.
எப்போதும் பள்ளிக்கூடம் விட்டு வந்து மாலை நேரத்தில் தெரு நண்பர்களோடு கள்ளன் போலீஸ் விளையாடிட்டு இரவில் தான் வீடு போவேன்.
ஆனால் வெள்ளிக்கிழமை இரவு அதாவது வியாழன் பின்னேரம் மட்டும் மஃரிப் பாங்கு சத்தம் கேட்டதுமே வீட்டுக்கு போயாக வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் வியாழன் பின்னேரம் முகம்,கை,கால் கழுவிட்டு சுத்தமாக வந்து எனது அன்னையின் திக்ரு மஜ்லிஸில் அமர வேண்டும்.
எனது அன்னை மஃரிப் தொழுகையை முடித்து விட்டு மஜ்லிஸில் அமரும் முன்பே பிள்ளைகளாகிய நாங்கள் எல்லோரும் அமர்ந்து விட வேண்டும்.
அல்லாஹ்வை திக்ரு செய்து விட்டு,மறைந்த எனது அன்னையின் பெற்றோர்களுக்கு துஆ செய்யும் முறையை சொல்லி தருவார் எனது தாயார்.நாங்களெல்லாம் பெயருக்கு துஆ செய்து விட்டு மீண்டும் விளையாட போகனுமே என்ற ஆர்வத்தில் இருப்போம்.
ஆனால்,எனது அன்னையோ அவரது பெற்றோர்களுக்காக மனமுருகி கண்ணீர் சிந்தி அல்லாஹ்விடம் துஆ செய்து கொண்டிருப்பார்கள்.அவங்க பெற்றோர்களை நினைச்சி உம்மா அழுகுறாங்க என்று மட்டுமே எங்களுக்கு தெரியும்.
ஒரு கட்டத்தில் எனது உம்மா அழுவதை காண பொறுக்காமல் ஏம்மா அழுவுறேனு அருகில் போய் கேட்டேன்?பெற்றோர்களின் திருப்தியில் தான் பிள்ளைகளுக்கான சுவர்க்கம் இருக்குனு மார்க்கம் சொல்லுதுப்பா.
ஆனால்,எங்க உம்மா,வாப்பா ஹயாத்தோடு இருந்தப்ப அவங்க மனம் குளிரும்படி நான் நடந்தேனானு எனக்கு தெரியல?
அவங்களுடைய பிழைகளை மன்னிக்க கோரி அல்லாஹ்விடம் நான் மன்றாடுவதின் மூலம் அவங்களுடைய திருப்திக்குரிய பிள்ளையாக அல்லாஹ் என்னை அங்கீகரிக்கலாம் அல்லவா?அதுக்கு தான் அல்லாஹ்விடம் அழுது,அழுது துஆ கேட்கிறேன் என்றார்கள்.
எனக்கு மதி தெரிந்து ஒரு வாரம் கூட எனது தாயார் திக்ரு மஜ்லிஸை விட்டதாக தெரியவில்லை?இன்று எனது அன்னை என்னுடன் இல்லை.ஆனால்,அவர்கள் சொல்லி தந்த அந்த நற்பண்புகள் மட்டும் என்னுடன் தொடர்கிறது.
திக்ரு கூடாது, துஆ கூடாது என்னும் சிலரது வார்த்தைகளை கேட்டு எந்தவித நல்ல அமல்களையும் செய்யாமல் ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளை வீணாக்கி தனக்கும் துஆ கேட்காமல்,தனது பெற்றோர்களுக்கும் துஆ கேட்காமல் பாராமுகமாய் இருப்பவர்களுக்கு மத்தியில் அல்லாஹ் என்னை அதில் இருந்து பாதுகாக்கிறான் அல்ஹம்துலில்லாஹ்.
எனது அன்னையின் நினைவாய் ஒவ்வொரு வெள்ளிகிழமை காலை நேரத்திலும் அந்த நற்பண்புகளை தொடர்கிறேன்.நீடிக்க துஆ செய்யுங்கள்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.