முல்லா நசருதீன்
முல்லா நசருதீன் வீட்டில் வறுமை. மனைவி: ”அல்லா அல்லா என்று எப்போதும் அலைகிறாய். இங்கே சோற்றுக்கு வழி இல்லை. என்ன செய்தார் உன் அல்லா?” முல்லாவால் பொறுக்க முடியவில்லை. வீட்டின் பின்புறம் சென்று அல்லாஹ்விடம் முறை இடுகிறார்: ”என்னைத் திட்டியதோடு உன்னையுமல்லவா என் மனைவி ஏசுகிறாள். இந்த ஏழைக்கு கருணை காட்ட மாட்டாயா, அல்லா?”
பக்கத்து வீட்டு செல்வந்தர் இந்த முறையீட்டைக் கேட்டு மனமிரங்கி ஒரு பண முடிப்பை சத்தமில்லாமல் முல்லாவின் வீட்டுக்குள் வீசினார். முல்லா அந்தப் பண முடிப்பை மனைவியிடம் கொடுத்து, ”பார்த்தாயா அல்லாஹ்வின் கருணையை” என்று பீத்திக்கொண்டார்.
சிலநாட்கள் சென்றபின் பக்கத்து வீட்டுச் செல்வந்தர் பணத்தைத் திருப்பிக் கேட்க, முல்லா அது அல்லா கொடுத்தது. உனக்கு ஏன் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று மறுத்துவிட்டார். செல்வந்தர் கோர்ட்டில் கேஸ் போட்டார். கோர்ட்டில் இருந்து சம்மன் வந்தது. கோர்ட்டுக்கு செல்லவேண்டிய நாளும் வந்தது. ”ஐயோ அல்லா, இந்த ஏழையிடம் ஒழுங்கான சட்டைகூட இல்லை. நான் எப்படி வழக்கு மன்றத்துக்குச் செல்வேன்,” என்று புலம்பினார் முல்லா. இதை ஒட்டுக்கேட்ட செல்வந்தர் ஒரு சட்டையைத் தூக்கி வீசினார் முல்லாவின் வீட்டுக்குள். முல்லாவும் அல்லா கொடுத்த சட்டையை அணிந்து கோர்ட்டுக்குச் சென்றார்.
நீதிபதி: ”முல்லா, நீ ஏன் அவரிடம் வாங்கிய பணத்தைத் தர மறுக்கிறாய்?”
முல்லா: ”நான் இவரிடம் எந்தப் பணமும் வாங்கவில்லை. இவர் ஒரு பைத்தியம். நான் போட்டிருக்கும் சட்டைகூட இவருடையதுதான் என்று சொன்னாலும் ஆச்சரியப்படமாட்டேன்.”
செல்வந்தர்: ”அது என்னுடைய சட்டையேதான், துரை அவர்களே என்று கத்தினார்”.
நீதிபதி: ”வழக்குப் பதிவு செய்தவர் ஒரு பைத்தியம் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. கேஸைத் தள்ளுபடி செய்கிறேன்”.
Tags: முல்லா நசருதீன்