இப்படியும் ஒரு புத்தக தின வாழ்த்து..
இப்படியும் ஒரு புத்தக தின வாழ்த்து..
நான் வாசிக்காத புத்தகங்கள் குறித்த பெருங்கவலை என்றும் என்னுள் உண்டு.ஓர் அறிஞன், ஒரு படைப்பாளி, ஒரு தத்துவஞானி, ஒரு விஞ்ஞானி காலம் முழுக்க உணர்ந்து கண்டதை நான் 300 பக்கங்களில் சுலபமாய் வாசிக்கிறேன். என் பின்னால் நீண்டு விரிகிற என் வீட்டு நூலகத்தின் அடுக்கறைகள் அவற்றில் நிறுத்திச்சார்த்தி வைத்துள்ள புத்தம் புது நூல்கள் என்னைப் பார்த்து இன்னும் வாசித்து முடிக்கவில்லையா? என ஏக்கத்தோடும் கோபத்தோடும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.
புத்தகத்தை என் விரல்கள் மெல்ல நகர்த்தும்போது ஏதும் அறியாமல் எப்படி இத்தனை நாட்களை எந்தக் குற்ற மனப்பான்மையுமின்றி மெத்தனமாய் கழித்திருக்கிறேன் என்று கேட்டு அந்தக் காகிதக் கைகள் என் கன்னத்தில் அறைவதாய் உணர்கிறேன். பங்குச்சந்தையில் மணித்துளிகளைப் பணத்துளிகளாய் மாற்றுவதை விட்டுவிட்டு, வணிகக் கரங்கள் தூக்கி மலீன எழுத்துகள் பெருக்கி காசு பார்ப்பதைவிட்டுவிட்டு உலகின் மூலையில் உள்ள முன்னூறு பேருக்காக அந்த அறிஞன், அந்தக் கலைஞன், அந்தப் படைப்பாளி, அந்தத் தத்துவஞானி, அந்த விஞ்ஞானி இப்படி ஆயுளையே பணயம் வைத்து வசவுகளுக்கிடையே நையாண்டிகளுக்கிடையே நக்கல்களுக்கிடையே அடுத்தடுத்த புத்தகங்களுக்காகத் தங்கள் மூளையைக் கசக்கிக்கொண்டிருக்கிறார்களே என்ற அப்பாவிக் கேள்விகள் அறியாமையாய் என்னுள் நுழைந்து கொண்டிருக்க புத்தகச் சாவிகளோடு அறிவு அறைகளைத் திறக்கப் போய்க்கொண்டிருக்கிறேன்.
உலகப் புத்தக தின வாழ்த்துகளைச் சொல்லி
*
சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி