அப்துல் காதிர் ஜீலானி !
அருட்கவி அதிரை தாஹா
அம்ரில்லா வெனும் கலீஃபாவின் அருமை ஆட்சி காலத்தே
இரம்லான் மாதம் இறையருளால் இப்புவி கண்டு பகல் நேரம்
சுரக்கும் பாலைக் குடியாமல் துய்யோனுக்காய் நோன்பிருந்தே
பெருமை செய்தே மெய்ஞானப் பேரமு துண்ட ஜீலானி !
ஜீலான் அருகில் நீப்புனிலே சிறந்த சாலிஹ் ஃபாத்திமாவின்
சீலம் மிகுந்த புதல்வரென ஞாலம்வந்து பெற்றோரும்
நாளும் காணும் நல்லோரும் நலமாய்வியந்து போற்றிடவே
ஆளும் இறையின் பேரருளை அழகாய் கொண்ட ஜீலானி !
பிறப்பை நபிகள் கனவினிலே பேணிக் கூறப் பொலிவுடனே
பிறந்து வந்தே இனத்தினிலே பெருமை சேர்த்தே இஸ்லாத்தின்
சிறப்பைப் பேசிச் சீர்செய்தே சிந்தை மகிழச் செய்திட்ட
நிறைவே எங்கள் குருவாக நிற்கும் பேறே ஜீலானி !
தந்தை இறக்க தாய் அணைப்பில் தங்கி வளர்ந்து தகை பெற்று
சிந்தை வளர்ந்து திருமறையைச் சீராய்க் கற்று, மெய்நெறியில்
பந்தம் கொண்டு பண்புடனே பாரில் வாழ்ந்தே இறைநெறியை
சொந்தம் கொண்ட மெய்ஞானிச் சுடரே ! காதிர் ஜீலானி !
அலியார் வீரம் உள்ளத்தில் அழகாய்க் கொண்டார் முஹ்யித்தீன்
வலியே என்று பேரறிஞர் வாழ்த்தினர் ! பத்தாம் வயதினிலே
வலியுல்லாஹ் எனும் பட்டம் வாகாய்ப் பெற்று செஞ்சொற்கள்
பலவும் முத்தாய்ப் பொழிந்திட்ட பண்பே ! காதிர் ஜீலானி !
கல்வி கற்றார் பதினெட்டுக் கடக்க வயதில், குறிக்கோளை
சொல்ல முடியா நின்றார்கள் சோதிமணி ! பின் உறுதியுடன்
அல்லாஹ் வுக்கே தன்வாழ்வை அர்ப்பணித்தல் எனவந்து
நில்லா வுலகில் நிலைத்தார்கள் நீதர் ! வேதர் ! ஜீலானி !
பாக்தாத் தேகி பெருங்கல்வி பண்பாய்க் கற்று மெய்வாழ்வை
ஆக்க முனைந்தார் முஹ்யித்தீன் ஆசி கேட்டனர் அன்னையிடம்,
நோக்கம் உயர்ந்த அன்னையவர் நுதலில் முத்தம் ஈந்திட்டார்
தேக்கி உண்மை வாழ் கென்றார் தேர்ந்தே சென்றார் ஜீலானி !
வல்லான் நெறியை நெஞ்சேற்றார், வற்றா மெய்யை மனமேற்றார்
கல்லும் கசியச் செய்கின்றகல்வி கற்கப் புறப்பட்டார்
செல்லும் வழியில் கள்வர்கள் சேர்ந்துப் பிடித்து நிறுத்திடவே
எல்லாம் வல்ல இறையோன்பால் ஏந்தி நின்றார் ஜீலானி !
கள்வர் கேட்ட கேள்விக்குக் கசடு நீக்கி உண்மைகளை
உள்ளம் ஒப்பிச் செப்பினரே உயர்ந்த அன்னைக் கூற்றன்றோ !
கள்வர் எல்லாம் சிறுவர்தம் கனிந்த உண்மைக் கேட்டதனால்
உள்ளம் திருந்தி நல்லாராய் உயரக் கண்டார் ஜீலானி !
சத்திய வழியைக் கண்டாரே சன்மார்க்கத்தில் நின்றாரே
நித்தம் நித்தம் இறைநாமம் நெஞ்சில் நிறைத்து வென்றாரே
முத்து முகம்ம தின்வழியை முழுதும் பற்றிச் சென்றாரே !
நத்தி நாளும் நன்மைகளை நாட்டும் நல்லார் ஜீலானி !
நன்றி :
இனிய திசைகள்
மார்ச் 2014