உலக புத்தக தினம்..
உலக புத்தக தினம்..
என்னைப் பார்க்க வருபவர்களில் புத்தகம் கொண்டு வருபவர்களே நல்ல நண்பர்கள் என்றார் ஆப்ரஹாம் லிங்கன்..
ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை என்றுரைத்த சிசரோ மாபெரும் சிந்தனையாளர்..
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது ” புத்தகங்கள் தான் ” என்றாராம் மார்ட்டின் லூதர் கிங்…
தனது நீண்ட பயணத்தின்(long march) போது மாசேதுங் எழுதிய நூல்கள் ஏராளம்…
தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது “புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்” என்றார் நேரு…
ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்பதை பல அறிஞர்கள் நினைவு கூர்கிறார்கள்…
தன் சிறுநீரகமும் கண்களும் பழுதுபட்ட நிலையிலும் தன் மரணம் வரை உருபெருக்கி கண்ணாடி துணையோடு புத்தகங்கள் படித்து வந்த பெரியார், பெண் விடுதலைக்கு வழி என்ன என்று கேட்டபோது , அவர்கள் கைகளிலுள்ள கரண்டிகளை பிடுங்கி விட்டு புத்தகங்களைக் கொடுங்கள் என்றார்….
உலகையே மாற்றியமைத்த கார்ல் மார்க்ஸ், காதல் மனைவி ஜென்னிக்கு இணையாக புத்தகங்களோடு வாழ்ந்தவர்..
லண்டன் நூலகத்தில் அம்பேத்கரின் கரங்கள் படாத நூலேதுமில்லை..
நெப்போலியன் போனபார்ட் யுத்தங்களுக்கு செல்லும் போது கூட இன்னொரு குதிரையில் புத்தகங்களும் பயணிக்கும்…
போலந்தில் தலைமறைவாக இருந்த காலத்தில் கூட வெட்டப்பட்ட மரத்தூரின் மீது அமர்ந்து கொசுக்கடிகளுக்கிடையே புத்தகங்கள் வாசித்தவர் லெனின்…
தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும் போது கூட லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” படித்துக் கொண்டிருந்தவர் பகத்சிங்…
அறிஞர் அண்ணாவிற்கு கன்னிமாரா நூலகம் வசிப்பிடங்களில் ஒன்றாக மாறியிருந்தது…
பள்ளி இறுதி கூட தாண்டாத கலைஞரையும் நூல்களையும் பிரித்துப் பார்க்க முடியாது..மிகக் கடும் பணிச்சுமைகளுக்கிடையே அவர் எழுத்துக்களை பார்க்கும்போது அவருடைய படிப்பின் ஆழம் புரியும்…அவரின் பேனா அவரின் ஆறாம் விரலாக இருந்தது என்றே சொல்லலாம்…
இந்தியாவில் பொதுவுடைமைக்கு விஞ்ஞான வெளிச்சம் தந்த ராகுல சாங்கிருத்யாயன் அரிய நூல்களை ஹசாரிபாக் சிறைச் சாலையில்தான் படைத்தார்…
புத்தகங்கள், கடந்த கால வரலாறு, தற்போதைய நிகழ்வுகள் ஆகியவற்றைச் சொல்வதுடன் அதை ஆழ்ந்து உட்கிரகிப்பவர்களுக்கு எதிர்காலத்தை முன்னறிவுக்கும் தீர்க்க தரிசிகளாக இருக்கின்றன…
மனித குல விடுதலைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் சிறைச்சாலைகளில் நூல்களைப் படிக்கிறார்கள்…பயணங்களில் வாசிக்கிறார்கள்…
புத்தகங்கள் படிக்கவோ படைக்கவோ நேரம் இல்லை என்பது ஒரு மேற்பூச்சான காரணம்தான்..
மின்சார விளக்குகளால் எவ்வளவு ஒளியூட்டப்பட்டாலும் புத்தகங்கள் இல்லாத வீடு இருள் படிந்த வீடே…
வாசிப்போம்…நிறைய….நிறைய
ஷேக்ஸ்பியரின் நினைவு நாள் நேற்று……
உலக புத்தக தினம்….ஏப்ரல் 23