புன்னகை கொண்டு வா
“புன்னகை கொண்டு வா”
எழுதியவர்: முனைவர் மு. அ. காதர், சிங்கப்பூர்
புனித ரமலானே!
புன்னகை கொண்டு வா!
அன்று பள்ளிவாசலில்
தொழுது கொண்டிருந்தோம்
இன்று வீட்டுவாசலில்
அழுது கொண்டிருக்கிறோம்!
படைக்குப் போகத்தான்
அச்சமாக இருக்கும்
இன்று
கடைக்குப் போகவே
அச்சமாக இருக்கிறது!
எதையும் தூக்கவில்லை
இதயம் மட்டும்
கனமாகவே இருக்கிறது!
புனித ரமலானே!
புன்னகை கொண்டு வா!
இப்போதெல்லாம்
அகத்தின் அழகு
முகத்தில் தெரிவதில்லை!
காரணம்
நாங்கள் முகக்கவசம் அணிந்திருக்கிறோம்!
கைக்கழுவி வருகிறோம்
வாய்ப்புகளையும் சேர்த்து!
ஓடிய வியாபாரம்
உட்கார்ந்து விட்டது!
தடுமாறி நிற்கிறோம் நாங்கள்!
கொரோனாவே!
நீ கண்ணில் தெரியவில்லை
கண்ணீரில் தெரிகிறாய்!
சிரிப்பைத் தொலைத்துவிட்டு
சிரிப்பாய் சிரிக்கிறது உலகம்!
புனித ரமலானே!
புன்னகை கொண்டு வா!