‘துன்முகியே’ மலர்க!
’துன்முகி’ ஆண்டே மலர்ந்திடுவாய்
துன்பம னைத்தும் தகர்த்திடுவாய்!
வறுமை விலகச் செய்திடுவாய்
பொறுமை வளரச் செய்திடுவாய்! (1)
அரசியல் ஒளிரச் செய்திடுவாய்
அநியாயம் அகன்றிடச் செய்திடுவாய்
லஞ்சம் அஞ்சிடச் செய்திடுவாய்
வஞ்சம் அனைத்தையும் அழித்திடுவாய்! (2)
சூதுஅனைத்தையும் பொசுக்கிடுவாய்
வாதுகள் அனைத்தையும் வதக்கிடுவாய்
தீதுசெய்வோரைத் தீர்த்திடுவாய்
பாதுகாப்பினை வழங்கிடுவாய்! (3)
கல்வி பெருகச் செய்திடுவாய்
நல்லோர் உயரச் செய்திடுவாய்
வல்லமை எல்லாம் வழங்கிடுவாய்
பொல்லாமை தனைப் பொசுக்கிடுவாய்! (4)
வள்ளுவம் ஓங்கச் செய்திடுவாய்
துள்ளுதமிழ் முந்திடச் செய்திடுவாய்
பள்ளிகள் பெருகச் செய்திடுவாய்
வள்ளல்கள் வலிமை வளர்த்திடுவாய்! (5)
நல்லவர் ஆட்சியை அமைத்திடுவாய்
வஞ்சகர் ஆட்சியை விரட்டிடுவாய்
பஞ்சம் வராது காத்திடுவாய்
லஞ்சப் பேயினைத் துரத்திடுவாய்! (6)
வேதனை அழியத் துணை செய்வாய்
சோதனை தேய்ந்திட வழி செய்வாய்
சாதனை ஆற்ற அருள் புரிவாய்
வாதினை வென்றிடத் திறன் தருவாய்! (7)
மனிதம் மலர்ந்திட அருள் தருவாய்
மானுடம் தழைத்திட வழி செய்வாய்
நாடகம் ஆடிடும் வஞ்சகரை
ஆடவிடாது அழித்திடுவாய்!
வள்ளுவம் பரப்பத் துணை நிற்பாய்
பள்ளிகள் அனைத்திலும் படித்திடவே!
கள்ளாமை பெருகிடத் துணை செய்வாய்
கள்ளுண்ணாப் பழக்கம் தந்திடுவாய்! (9)
ஆட்சியில் இருக்கும் அரக்கர்களை
அகற்றிட எமக்குத் துணை புரிவாய்
மாட்சிமை பொருந்திய மக்களையே
ஆட்சியில் அமர்த்திட அருள் புரிவாய்! (10)
பணத்தால் தேர்தல் வெற்றிபெறும்
கொடுமை அழியத் துணை நிற்பாய்!
பண்பில்லாத தலைவர்களை
அடியொடு அழிக்கத் துணை செய்வாய்! (11)
ஏழ்மை அகற்றிடத் துணை புரிவாய்
தாழ்மை தொலைத்திட பலம் தருவாய்
வாழ்வு நன்றாய் அமைந்திடவே – புது
ஆண்டே எமக்கு அருள் புரிவாய்! (12)