முதுகுளத்தூர் அருகே நடத்தை சந்தேகத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: கணவர் கைது
முதுகுளத்தூர், பிப். 20–
முதுகுளத்தூர் அருகே உள்ள கீழபனையூரை சேர்ந்தவர் பூமி (வயது40). இவரது மனைவி கனி வாசுகி (32). கடந்த சில மாதங்களாக பூமி சரவர வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கணவர் வேலைக்கு செல்லாததால் கனிவாசுகி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில் மனைவியின் நடத்தையில் பூமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்–மனைவிக்கு இடையே தினமும் பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
நேற்று காலை கனிவாசுகி வேலைக்கு செல்லும் நேரத்தில் பூமி மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பூமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கனிவாசுகியை சரமாரியாக வெட்டினார்.
இதில் அவருக்கு தலை, கை, முதுகு ஆகிய இடங்களில் வெட்டு விழுந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரது உடல்நிலை மோசமானதால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் கனிவாசுகி சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கனிவாசுகியின் மாமா ராஜேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் தேரிருவேலி போலீஸ் இன்ஸ்பெக்டர் மூக்கன், சப்–இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மனைவியை வெட்டிய பூமியை கைது செய்தனர்.