திருமணமான 4 நாளில் பெண் கடத்தல்: கணவர் புகார்
முதுகுளத்தூர் அருகே திருமணமான 4 நாளில் மனைவியை சிலர் கடத்திச் சென்றதாக கணவர் புகார் தெரிவித்துள்ளார்.
முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரத்தைச்சேர்ந்த சித்திரவேலு மகன் வெங்கடேசன்(29). இவருக்கும், பொன்னுச்சாமி மகள் மலர்(22) என்பவருக்கும் கடந்த 2-ஆம்தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு மலர் முதுகுளத்தூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்தாராம். அப்போது அந்தக்கடையில் வேலை செய்து வந்த மட்டியரேந்தலைச் சேர்ந்த தங்கம் என்பவரும் மலரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து 7-ஆம்தேதி காரில் வந்த ஒரு கும்பல் செல்வநாயகபுரத்தில் இருந்த மலரை கடத்தி சென்றதாக முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் வெங்கடேசன் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து காரில் கடத்திச்சென்ற தங்கத்தையும் அவரது கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.