16 மூட்டைகள் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
முதுகுளத்தூர் அருகே 16 மூட்டைகள் ரேஷன் அரிசி கடத்திய இருவரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கிடத்திருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. அதே ஊரில் ரேஷன் கடையில் விற்பனையாளராக உள்ளார். சாமிபட்டியைச் சேர்ந்த அஜித்குமார் (20), அதே ஊரைச் சேர்ந்த ராமர் ஆகியோர் இந்த ரேஷன் கடையில் இருந்து 16 மூட்டைகள் ரேஷன் அரிசி கடத்தி டிராக்டரில் ஏற்றிக்கொண்டு கொண்டுலாவி கிராமத்துக்கு சென்றனர். அப்போது முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீஸார் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது ரேஷன் அரிசியை கடத்திச் செல்வது தெரியவந்தது. இதற்கு விற்பனையாளர் மாரிமுத்து உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதன் பேரில் விற்பனையாளர் மாரிமுத்து மற்றும் அஜித்குமார், ராமர் ஆகியோர் மீது பேரையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில், அஜித்குமார், ராமர் ஆகிய இருவரையும் கைது செய்து ரேஷன் அரிசி மூட்டைகளுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.