முதுகுளத்தூர், கமுதி பகுதிகளில் விலையில்லா சைக்கிள் வழங்கல்
முதுகுளத்தூர், கமுதி பகுதிகளில் உள்ள 16 அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 1,546 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சைக்கிள் வழங்கும் விழாவுக்கு அமைச்சர் எம்.மணிகண்டன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.முருகன், முன்னாள் மாவட்டச் செயலர் ஆர்.தர்மர், முன்னாள் மாவட்ட ஒன்றியக் குழு தலைவர் எம்.சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் டி.பாலசுப்பிரமணியன் வாழ்த்திப் பேசினார்.விழாவில் முதுகுளத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 111, முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளிக்கு 266, பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 111, காக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 40, அலங்கானூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 44, கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 43, உச்சிநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 31, டி.எம். கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 46 என 8 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 692 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார்.
கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழாவுக்கு அமைச்சர் எம்.மணிகண்டன் தலைமை வகித்து மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். விழாவில் ஒன்றியச் செயலர் எஸ்.பி.காளிமுத்து, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் டி.பாலு, முன்னாள் கவுன்சிலர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் தேவதாஸ் வரவேற்றார். நிகழ்ச்சியில் கமுதி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 47, கமுதி கே.என். ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 483, நீராவி தேவாங்கர் பள்ளிக்கு 146, ராமசாமிபட்டி பள்ளிக்கு 44, கோவிலாங்குளம் பள்ளிக்கு 67, பெருநாழி சத்திரிய இந்து நாடார் பள்ளிக்கு 48, மண்டலமாணிக்கம் அரசுப் பள்ளிக்கு 19 என மொத்தம் 8 பள்ளி மாணவ, மாணவியருக்கு மொத்தம் 854 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. பரமக்குடி கல்வி மாவட்ட உதவி ஆய்வாளர் எஸ்.லோகமுருகன் நன்றி கூறினார்.