முதுகுளத்தூர் ஒன்றியக்குழுக் கூட்டம்
முதுகுளத்தூர் யூனியன் அலுவலகத்தில் ஒன்றியக் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
முதுகுளத்தூரில் யூனியன் அலுவலகத்தில் ஒன்றியக்குழுக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழுத் தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி தலைமை வகித்தார்.
பிடிஓ ரவிச்சந்திரன், ஏபிடிஓ செந்தூர்பாண்டி, மாவட்டக்கவுன்சிலர் கர்ணன், உதவித் தொடக்க கல்வி அலுவலர் சூசைதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர் சிவக்குமார் (மேலக்கன்னிசேரி)பேசியதாவது: புதுவாழ்வுத் திட்ட அதிகாரிகள், காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்களை ஒன்றியக்குழு கூட்டத்திற்கு அழைக்க வேண்டும் என பேசினார்.
கவுன்சிலர்கள் வேலுச்சாமி (தேரிருவேலி), அணிகுருந்தான் கிராமத்திற்கு நீர் தேக்க தொட்டிகள் ஏற்படுத்தி தருமாறும், சூசையம்மாள்(வளநாடு) செங்கற்படை பாலம் இடிந்த நிலையில் உள்ளதால் அதனை மராமத்துசெய்து தருமாறும் பேசினர்.
தொடர்ந்து மூன்று கூட்டத்திற்கு வராமல் இருக்கும் கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தனசேகரன்(பெரியஇலை) கோரிக்கை விடுத்தார். அது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுன்சிலர்கள் ஹேமா(உடைகுளம்), கோபால் (திருவரங்கம்), ராஜேந்திரன்(கொளுந்துரை), சண்முகம்மாள் (விளங்குளத்தூர்), ஆரோக்கியமேரி(புஷ்பவனம்) மற்றும் யூனியன் அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.