முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

Vinkmag ad

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைவதாக புகார் கூறப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் 10 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் பகலில் மட்டும் 2 மருத்துவர்கள் இருக்கின்றனர். சில நாள்களில் பணியில் உள்ள மருத்துவர்களும் விடுப்பில் சென்று விடுகின்றனர்.

இதனால் தினசரி மாலை மற்றும் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாத நிலை நிலவுவதாக நோயாளிகள் புகார் கூறுகின்றனர். இதனால் இரவில் விபத்து உள்பட அவசர கால சிகிச்சைக்கு வருவோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இருப்பதில்லை என்ற புகார் உள்ளது. அவசர சிகிச்சைக்கு வருவோரை  ராமநாதபுரம், மதுரை போன்ற தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்படி அங்கிருக்கும் செவிலியர்கள் கூறுகிறார்களாம்.

இதுகுறித்து சில நோயாளிகள் கூறியதாவது: மருத்துவமனையில், சுகாதாரம் இல்லை, தண்ணீர் வசதி இல்லை, மின்தட்டுப்பாடு ஏற்பட்டால் மகப்பேறுக்கு வந்த பெண்கள் இருட்டு அறையில் இருக்கும் நிலை ஏற்படுகிறது.

ஜெனரேட்டர் இருந்தும் அதை இயக்குவதற்கு பணியாளர்கள் இல்லை. கர்ப்பிணி பெண்களுக்கு மாதங்களை கணக்கிடும் கருவி இருந்தும் பணியாளர்கள் இல்லை. நோயாளிகள் படுக்கைகள் சுத்தம் இல்லாமல் இருக்கிறது. மருத்துவமனையில் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதால் நோயாளிகள் இரவில் தங்கி மருத்துவம் செய்ய அச்சப்படுகின்றனர். எனவே முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News

Read Previous

அதிரடி அபராதம், தண்டனை! வருகிறது புதிய சட்டம்!

Read Next

உயிருக்கு ஆபத்தான உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது !!

Leave a Reply

Your email address will not be published.