முதுகுளத்தூரில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்
முதுகுளத்தூரில் சமீபத்தில் பெய்த மழையினால் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
முதுகுளத்தூர் பகுதிகளில் சமீபத்தில் 2 நாள்கள் தொடர் மழை பெய்ததில் கண்மாய், ஊரணிகளில் தண்ணீர் பெருகி காணப்படுகிறது.
முதுகுளத்தூர் ஏ.எஸ். மஹால் பின்புறத்தில் உள்ள தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தெருக்களில் மழைநீர் பெருகி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள் அவதி அடைந்துள்ளனர்.
மேலும் தண்ணீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் வீட்டைச் சுற்றி தேங்கியுள்ளதால் கொசு உற்பத்தி கேந்திரமாக மாறி உள்ளது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் தேங்கியுள்ள மழைநீரை உடனே அப்புறப்படுத்துமாறு அத்தெருவில் குடியிருப்போர் பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.