முதுகுளத்தூரில் வட்டார அளவிலான கபடி போட்டி
முதுகுளத்தூரில் நடைபெற்ற வட்டார அளவிலான 19 வயதுக்கு உள்பட்ட ஆண்களுக்கான கபடிப் போட்டியில் கடலாடி பள்ளி முதலிடம் பெற்றது.
முதுகுளத்தூர் டிஇஎல்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கடலாடி, சாயல்குடி, சிக்கல், தேரிருவேலி, பேரையூர் பகுதி பள்ளிகளைச் சேர்ந்த 5 அணிகள் கலந்து கொண்டன.
இதில், கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி முதல் இடத்தைப் பெற்றது. சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடம் பெற்றது. போட்டிக்கு முதுகுளத்தூர் டிஇஎல்சி பள்ளியின் தலைமை ஆசிரியை பிரிட்டா செல்வக்குமாரி தலைமை வகித்தார்.
உடற்கல்வி ஆசிரியர்கள் வேதமலை, என்.கமால் பாட்சா, ஆர்.பாலசுந்தரம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் வி.சந்தனகவிதா, திருமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.பிரசாத் பாராட்டினார்.