முதுகுளத்தூரில் வட்டார கைப்பந்து போட்டி
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வட்டார அளவிலான கைப்பந்துபோட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.பிரசாத் தொடக்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் வி.சந்தனகவிதா, என்.கமால்பாட்ஷா, முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார அளவில் 14 வயதிற்கு உள்பட்ட மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 8 பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் நரிப்பையூர் பாரதமாதா உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடமும், சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாமிடமும் பெற்றனர்.
17 வயதிற்கு உள்பட்ட மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 7 பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் மலட்டாறு வி.வி.எஸ்.எம் மேல்நிலை பள்ளி மாணவர்கள் முதலிடமும், நரிப்பையூர் பாரதமாதா உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாமிடமும் பெற்றனர். 19 வயதிற்கு உள்பட்ட மாணவர் பிரிவில் 4 பள்ளிகள் கலந்து கொண்டதில் ஏர்வாடி அரசு மேல்நிலை பள்ளி முதலிடமும், சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாமிடமும் பெற்றன. நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் ஆர்.பாலசுந்தரம், முகம்மது உசேன், தமிம் அன்சாரி, அபு ஆகியோர் பணியாற்றினர்.