முதுகுளத்தூரில் கல்லூரி கட்டட கட்டுமான பணிகள் இழுத்தடிப்பு
முதுகுளத்தூர்:ஒப்பந்த காலம் முடிந்தும், முதுகுளத்தூர் அரசு கல்லூரி கட்டட கட்டுமான பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய பகுதிகளில் கடந்த 2013 ல் அரசு கல்லூரிகளை “வீடியோ கான்பரன்சிங்’ முறையில் தமிழக முதல்வர் ஜெ., துவக்கி வைத்தார். கல்லூரிக்கு தேவையான கட்டடங்கள் இல்லாததால், தற்காலிகமாக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்களில், கல்லூரி வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.
கல்லூரிக்கு நிரந்தர கட்டடங்கள் கட்ட, தலா ரூ.7 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில், 2014 பிப்., 26 ல் பணிகள் துவங்கியது. ஒப்பந்த காலமான ஓராண்டிற்குள் அதாவது, மே 2015 க்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. அதன்படி, இந்த கல்வியாண்டில் புதிய கட்டடத்தில் வகுப்புகள் துவங்கியிருக்கவேண்டும். ஆனால் புதிய கட்டடம் கட்டும் பணி மந்தமாக நடைபெறுவதால், கல்லூரி வகுப்புகள் பள்ளி வளாகங்களிலே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.