முதுகுளத்தூரில் உள்ள பராமரிப்பில்லாத விடுதியில் மாணவிகள் அவதி
முதுகுளத்தூர், : முதுகுளத்தூரில் உள்ள அரசு சீர்மரபினர் மாணவிகள் விடுதி பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் அதில் தங்கியுள்ள மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர்.
முதுகுளத்தூரில் கடலாடி செல்லும் விலக்கு சாலையில் அரசு சீர்மரபினர் மாணவிகள் விடுதி உள்ளது. இதில் 120க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதிக்கு செல்வதற்கு போதிய பாதை வசதி இல்லை. மேலும் விடுதியின் சுற்றுச்சுவர் 3 அடி உயரமே உள்ளது. விடுதியை சுற்றி கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன.
விடுதிக்கு செல்லும் பாதை பகுதியை ஆக்கிரமித்து ஆடு, மாடுகளை கட்டி வைத்துள்ளனர். சுற்றுச்சுவர் உயரம் குறைவாக உள்ளதால், இரவு நேரங்களில் விடுதிக்குள் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் வருவதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
விடுதி கட்டிடத்தை முறையாக பராமரிக்க வேண்டும், விடுதியை சுற்றி வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவிகள் கூறுகையில், “விடுதியின் முன்பகுதியில் மின் விளக்கு வசதி இல்லை. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் உள்ளே வருகின்றன. மேலும் விடுதிக்கு வரும் பாதையை ஆக்கிரமித்து ஆடு, மாடுகளை கட்டி வைத்துள்ளனர்.
இதனால் பாதை முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதனால் தொற்றுநோய்களும் பரவி வருகின்றன. விடுதியை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றனர்.
http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=271906&cat=504