முக்கிய நகரங்களுக்கு பஸ் வசதி; முதுகுளத்தூர் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்
முதுகுளத்தூர் : முதுகுளத்தூரிலிருந்து முக்கிய நகரங்களுக்கு பஸ் வசதி வேண்டும், என நகர் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.
முதுகுளத்தூரிலிருந்து நாகூர், வேளாங்கன்னி, திருச்செந்தூர், மதுரை, சென்னை, கோவைக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால், பழநி, கன்னியாகுமரி, குற்றாலம், சேலம், ஈரோடு ஆகிய நகரங்களுக்கு இல்லை. இந்த ஊர்களுக்கு வியாபாரிகள், சுற்றுலா பிரியர்கள், வேலைக்கு செல்வோர், சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து மாநில வர்த்தக சங்க துணை தலைவர் கருப்பசாமி கூறுகையில், “” முதுகுளத்தூரிலிருந்து முக்கிய ஊர்களுக்கு செல்ல, அரசு பஸ் சேவை இல்லை. எனவே ராமநாதபுரத்தில் இருந்து உத்திரகோசமங்கை, முதுகுளத்தூர், கமுதி, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை ஆகிய ஊர்களை இணைக்கும் வகையில், புதிதாக நான்கு வழிச்சாலை வேண்டும். வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு செல்லும் வியாபாரிகள் குறைந்த விலையில் பொருட்களை கொள்முதல் செய்தாலும், போக்குவரத்து செலவு அதிகரிப்பதால், கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். முதுகுளத்தூருக்கு ரயில் போக்குவரத்து வசதியும் இல்லாதால், பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது,” என்றார்.