மருத்துவர்கள் இல்லாத அரசு மருத்துவமனை: நோயாளிகள் அவதி

Vinkmag ad

முதுகுளத்தூர் தாலுகா அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் 50 படுக்கை அறைகள் உள்ளன. இங்கு அறுவை சிகிச்சை மையம், எக்ஸ்ரே, ஸ்கேன், ஈசிஜி, பரிசோதனைக் கூடம் என அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால் இதற்கான பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படாமல் பூட்டியே கிடக்கின்றன. அங்குள்ள கருவிகளும் பயன்படுத்தப்படாமல் இருப்பதால் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன.

இந்த மருத்துவமனையை சுற்றி 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 1000க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் 11 மருத்துவர்கள் பணி புரிய வேண்டும்.

ஆனால் 2 பெண் மருத்துவர்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர்.

ஆண் மருத்துவரே கிடையாது. இரவு நேரங்களில் பணிபுரிய மருத்துவர்கள் இல்லை. இரவு நேரங்களில் விபத்து மற்றும் பாம்பு போன்ற விஷ பூச்சிகள் கடித்தால் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் இரவில் இங்கு வரும் நோயாளிகளுக்கு செவிலியர்கள் செல்போன் மூலம் மருத்துவர்களிடம் தொடர்பு கொண்டு எந்த மருந்து மற்றும் ஊசி போட வேண்டும் என கேட்டு மருத்துவம் செய்கின்றனர்.

இதனால் அரசு மருத்துவமனைக்கு இரவில் நோயாளிகள் வருவதற்கு அச்சம் அடைந்து தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், பல முறை போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

எனவே மாவட்ட ஆட்சியர் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களை பணியில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

News

Read Previous

நிலைபெற நீ வாழியவே!

Read Next

இன்றிரவு

Leave a Reply

Your email address will not be published.