மனைவியுடன் தகராறு:கணவரைத் தாக்கிய 3 பேர் கைது
முதுகுளத்தூரில் கணவன்- மனைவி இடையிலான தகராறில், கணவரைத் தாக்கியதாக 3 பேரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மலைச்சாமி (27). இவரது மனைவி சிவரஞ்சனி. இருவருக்கும் சில நாள்களுக்கு முன்பு குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவரஞ்சனி தனது கணவரை விட்டுப்பிரிந்து முதுகுளத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சனிக்கிழமை மலைச்சாமி முதுகுளத்தூர் சென்று, சிவரஞ்சனியை தன்னுடன் வருமாறு அழைத்தாராம். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சிவரஞ்சனியின் உறவினர்களான முதுகுளத்தூர் செல்லியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த செந்தூர்முருகன், அவரது மனைவி அனுராதா (32), முத்துராமலிங்கம் மகன் குருசெல்வம், வடக்கூரைச்சேர்ந்த கணேசன் மகன் வானஸ்ராஜ் ஆகியோர் சேர்ந்து மலைச்சாமியை தாக்கினராம். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் மலைச்சாமி கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ. செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து அனுராதா, குருசெல்வம், வானஸ்ராஜ் ஆகியோரை கைது செய்தார்.