பைக் மீது கார் மோதி வங்கிச் செயலர் சாவு
பரமக்குடி அருகே உள்ள முதுகுளத்தூர் சாலை காந்தக்குளம் முனியப்பசுவாமி கோயில் பகுதியில் வெள்ளிக்கிழமை இருசக்கரவாகனம் மீது கார் மோதியதில் வங்கிச் செயலர் உயிரிழந்தார்.
முதுகுளத்தூர் தாலுகா புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராக்கப்பன் மகன் ராஜேந்திரன் (45). பரமக்குடி மாதவன் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், பரமக்குடி ஒன்றியம் வெங்கிட்டன்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வந்தார்.
இவரது மகன் கமலக்கண்ணன் பிளஸ் 2 தேர்வில் 1173 மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்புக்கான கட்டாப் மதிப்பெண் 199.25-ம் எடுத்துள்ளார். மருத்துவ படிப்பில் சேருவதற்காக தேவையான சாதி மற்றும் இருப்பிடச் சான்றுகள் பெறுவதற்காக தனது நண்பர் மோகன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் முதுகுளத்தூர் சென்று சான்றிதழ்களை வாங்கிக்கொண்டு திரும்பி வந்துள்ளார்.
பரமக்குடி அருகே காந்தக்குளம் முனியப்பசுவாமி கோயில் அருகே முதுகுளத்தூரிலிருந்து பரமக்குடி நோக்கி வந்த கார் மோதியதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து எமனேசுவரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.